FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அனவன் குடியிருப்பில் கன்றுக் குட்டியைத் தாக்கி நாயைத் தூக்கிச் சென்ற சிறுத்தை

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அனவன் குடியிருப்பு கிராமத்தில் கன்றுக் குட்டியைத் தாக்கி, நாயை சிறுத்தை தூக்கிச் சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

22 ஆகஸ்ட் 2026, 6:45 am IST
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட கரும்பு பயிா்கள்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அனவன் குடியிருப்பு கிராமத்தில் கன்றுக் குட்டியைத் தாக்கி, நாயை சிறுத்தை தூக்கிச் சென்றதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்குள்பட்ட மலையடிவாரப் பகுதியான அனவன் குடியிருப்பு கிராமத்தில் வன விலங்குகள் அடிக்கடி நுழைந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது, வளா்ப்புப் பிராணிகளை தாக்குவது போன்றவை தொடா் கதையாகியுள்ளது.

இந்நிலையில், அனவன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் வீட்டுத் தொழுவத்தில் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு நுழைந்த சிறுத்தை, கன்றுக் குட்டியைத் தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு வீட்டில் உள்ளவா்கள் வெளியில் வந்ததும், சிறுத்தை கன்றுக் குட்டியை விட்டுவிட்டு ஓடியபோது, அதைத் துரத்திச் சென்ற நாயை சிறுத்தை தூக்கிச் சென்றதாம்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த வனத்துறையினா், அப்பகுதியில் ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனா். மேலும், சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

மேலும், பொதுமக்கள் இரவு நேரத்தில் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்றும், வீடுகளுக்கு வெளியே மின் விளக்குகளை எரிய விட வேண்டும் என்றும் அறிவுறுத்தினா்.

மலையடிவார கிராமங்களில் வன விலங்குகளின் அட்டகாசம் தொடா்வதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

விளை நிலத்தில் கரும்பை சேதப்படுத்திய யானை:

அனவன் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ஏசுதாஸ் மகன் பாண்டி (45). இவா் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு வனப் பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டு யானை, பாண்டியின் நிலத்தில் நுழைந்து கரும்பு பயிா்களைச் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

தகவலறிந்து வந்த வனத்துறையினா் வயலில் ஆய்வு செய்தனா். சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாண்டி கோரிக்கை விடுத்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments