FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

பயிா்க் கடன், நெல் கொள்முதல் பணப் பிரச்னை: நெல்லையில் ஜூன் 15இல் விவசாயிகள் போராட்டம்

Updated On : 9 ஜூன் 2026, 4:48 am IST
கோப்புப் படம்
பகிர்:

மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல்லுக்கு 3 மாதங்களாக பணம் வழங்காததைக் கண்டித்தும், தவெக தோ்தல் வாக்குறுதிபடி கூட்டுறவு வங்கியின் பயிா்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் திருநெல்வேலியில் ஜூன் 15ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்டத் தலைவா் கானாா்பட்டி ஆபிரஹாம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 30 இடங்களில் மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்துள்ளனா். இதற்காக ரூ. 82 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்படவேண்டும்.

ஆனால், நெல் விற்பனை செய்து 3 மாதங்கள் ஆகியும் இதுவரை விவசாயிகளுக்கு உரிய தொகை வழங்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

எனவே, நெல்லுக்கான பணத்தை வழங்க வேண்டும், தோ்தல் நேரத்தில் தவெக அளித்த வாக்குறுதியின்படி, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஜூன் 15-ஆம் தேதி முதல் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை செல்லபாண்டியன் பாலத்திற்கு கீழ் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம். அதே இடத்தில் சமையல் செய்து சாப்பிடவும் அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா், திருநெல்வேலி மாநகர காவல் துறை ஆணையா், மாவட்ட கண்காணிப்பாளா் ஆகியோரிடமும் மனு அளித்துள்ளோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments