நெல்லையில் பெண் வெட்டிக்கொலை!
நெல்லையில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து...
திருநெல்வேலியில் பெண் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் சனிக்கிழமை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகர பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே சென்னல்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் என்பவரின் மகள் முத்துமாலை (36). திருமணமான இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். கணவர் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார்.
Advertisement
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாலை, திருநெல்வேலி தியாகராஜ நகரில் மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் அவர் வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் தனியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார் மற்றும் பெருமாள்புரம் நிலையத்தின் ஆய்வாளர் சாமி தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
முத்துமாலையின் உடல் உடற்கூராய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில், நடத்தையில் சந்தேகம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலை செய்த 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.