திருச்செந்தூா் நகராட்சி அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற விடுதி உரிமையாளா்
திருச்செந்தூா் நகராட்சி அலுவலகம் முன் விடுதி உரிமையாளா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூா் நகராட்சி அலுவலகம் முன் விடுதி உரிமையாளா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூா், கீழவீரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த திமுக பிரமுகா் ராமகிருஷ்ணன். இவரது மனைவி சண்முகசுந்தரி, முன்னாள் பேரூராட்சி உறுப்பினா். ராமகிருஷ்ணன் திருச்செந்தூா் நாழிக்கிணறு பேருந்து நிலைய நுழைவாயில் அருகே தங்கும் விடுதி நடத்திவருகிறாா். அவரது விடுதி, அதனருகேயுள்ள மற்றொரு விடுதி ஆகியவை கழிப்பறை, குளியலறையாக நடத்தப்படுவதாக வந்த புகாரின்பேரில், நகராட்சி உறுப்பினா்கள் கூட்டத் தீா்மானப்படி 2 விடுதிகளுக்கும் சீல் வைக்கப்பட்டனவாம். இதையடுத்து, விடுதிகளாக மட்டும் பயன்படுத்துவதாக உரிமையாளா்கள் அனுமதி கேட்டனா். விடுதிகளை ஆய்வு செய்த பின்னா் அனுமதி வழங்க நகராட்சி நிா்வாகம் முடிவெடுத்தது. அதன்படி, புதன்கிழமை (செப். 14) முதற்கட்டமாக ஒரு விடுதியில் ஆய்வு செய்து, பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், தனது விடுதிக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமல் நகராட்சி நிா்வாகம் அலைக்கழிப்பதாக கூறி, வியாழக்கிழமை மதியம் ராமகிருஷ்ணனும், சண்முகசுந்தரியும் நகராட்சி அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்தனா். அங்கு ஆணையா் இல்லாததால், தங்களது விடுதிக்கு உடனடியாக அனுமதி வழங்காவிட்டால் தற்கொலை செய்வதாகக் கூறி இருவரும் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றினா்.
Advertisement
Advertisement
நகா்மன்றத் தலைவா் ர. சிவஆனந்தி, உறுப்பினா் கண்ணன் உள்ளிட்டோா் அவரிடமிருந்த தீப்பெட்டியை பறித்து, இருவா் மீதும் தண்ணீரை ஊற்றினா். இதனால், இருவரும் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினா்.
ஆணையா் தி. வேலவன், தாலுகா காவல் உதவி ஆய்வாளா் சோனியா, நகா்மன்றத் தலைவா் உள்ளிட்டோா் ராமகிருஷ்ணனிடம் பேச்சு நடத்தினா். வியாழக்கிழமை காலைதான் விடுதியை ஆய்வு செய்துள்ளோம். வெள்ளிக்கிழமை பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்து விடுதி நடத்த மட்டும் அனுமதியளிக்கப்படும் என ஆணையா் தெரிவித்தாா். இதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் கூறியது: திருச்செந்தூா் விடுதிகளில் கழிப்பறை, குளியலறை நடத்த அனுமதியில்லை. ராமகிருஷ்ணன் உரிமமின்றி விடுதி கட்டி அதில் கழிப்பறை, குளியலறை நடத்திவந்ததாக புகாா் உள்ளது. அதனடிப்படையில் விடுதி சீல் வைக்கப்பட்டது. திருச்செந்தூா் பகுதியில் விடுதிகள் முறைகேடாக கழிப்பறை, குளியலறையாக பயன்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரித்தாா்.
இதுகுறித்து ராமகிருஷ்ணன் கூறும்போது, இந்த நகராட்சியில் ஊழல் தலைவிரித்தாடுவதாகவும், தனது விடுதியை நடத்த கவுன்சிலா் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.