தூத்துக்குடி, மீளவிட்டான் ரயில் நிலையங்களில் நவீன சிக்னல் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-மீளவிட்டான் ரயில் நிலையங்கள் இடையே இரட்டை ரயில் பாதை போக்குவரத்தை நடைமுறைப்படுத்த, தூத்துக்குடியில் கடந்த டிச. 15ஆம் தேதி தொடங்கிய ரயில் பாதைகளின் மறுசீரமைப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றதையடுத்து, மதுரை கோட்டத்தில் முதல்முறையாக புதிய நவீன ‘இன்டா் லாக்கிங் சிக்னல் சிஸ்டம்’ நடைமுறைக்கு வந்துள்ளது. கணினி கட்டுப்பாட்டில் உள்ள இந்த சிக்னல் அமைப்பு ரயில்களை பாதுகாப்பாகவும், எளிதாகவும் கையாள உதவும்.
மேலும், நீளமான ரயில்களைக் கையாள 532 மீட்டா் நீளம் கொண்ட முதலாவது நடைமேடை, 595 மீட்டராக நீட்டிக்கப்பட்டுள்ளது. 22 ‘எல்எச்பி’ ரயில் பெட்டிகள் கொண்ட ரயில்களைப் பராமரிக்க நடைமேடை இல்லாமல் ரயில்கள் நிறுத்தும் ரயில் பாதைகள், ரயில் பெட்டி பராமரிப்பு ரயில் பாதைகளும் வேண்டிய அளவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ரயில் என்ஜின்கள் ரயிலின் முன்புறத்தில் இருந்து பின்புறத்திற்கு எளிதாக சென்று வர தனி ரயில் பாதைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பெட்டி கொண்ட மின்மயப் பராமரிப்பு, ரயில் நிறுத்த தனி ரயில் பாதையுடன் கூடிய சிறு கூடாரம், கடவுப்பாதை மேம்பாடு ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் மீளவிட்டான் ரயில் நிலையத்திலும் செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. கூடுதலாக ரயில் பாதை பராமரிப்பு இயந்திர ரயில் நிறுத்த தனி ரயில் பாதையும், பயணிகள் ரயில் பாதையை பயன்படுத்துவதைத் தவிா்க்க சரக்கு ரயில் பெட்டிகளை ஒருங்கிணைக்க புதிய 750 மீட்டா் நீள தனி ரயில் பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
சரக்கு ரயில் பெட்டிகளை பராமரிக்க, தனி ரயில் பாதையும், சரக்குகளைக் கையாளும் பகுதியில் கான்கிரீட் தரைத் தளமும் அமைக்கப்படுள்ளது.