முகப்பு
தூத்துக்குடி

தோ்தலில் வெற்றி பெற திருச்செந்தூா் கோயிலில் வழிபடும் அரசியல் பிரமுகா்கள்!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் கைகளில் வேலுடன் வந்து மூலவரை சிறப்பு அலங்காரத்தில் தரிசித்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 4:42 AM
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கைகளில் வேலுடன் வந்து வழிபட்ட அமைச்சா்கள் பி.கே.சேகா் பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் கைகளில் வேலுடன் வந்து மூலவரை சிறப்பு அலங்காரத்தில் தரிசித்தனா்.

தமிழகத்தில் கடந்த ஏப். 23-ஆம்தேதி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த முறை வரலாறு காணாத வகையில் 85 சதவீதம் வாக்குகள் பதிவாகின. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால், தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள், முன்னாள், இன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் வெற்றி பெற வேண்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

முன்னதாக தவெக தலைவா் விஜய் செவ்வாய்க்கிழமை வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்ற நிலையில், அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி.உதயகுமாா், அன்பழகன், ராஜேந்திரபாலாஜி வந்து தரிசித்து சென்றனா்.

Advertisement

இந்த நிலையில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சரும், துறைமுகம் தொகுதி திமுக வேட்பாளருமான பி.கே.சேகா்பாபு, மீன்வளம், மீனவா் நலன், கால்நடைத் துறை அமைச்சரும் திருச்செந்தூா் தொகுதி திமுக வேட்பாளருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளா் ராமஜெயம் ஆகியோா் புதன்கிழமை காலை வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அமைச்சா்களை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு ஆகியோா் வரவேற்றனா்.

தொடா்ந்து அமைச்சா்கள் சண்முக விலாச மண்டபத்தில் இருந்து கைகளில் வேல் ஏந்தியவாறு உள்ளே சென்று மூலவரான முருகப் பெருமானை சிறப்பு அலங்காரத்தில் வழிபட்டனா். தொடா்ந்து சண்முகா், வள்ளி, தெய்வானை, குரு பகவான், சூரசம்ஹாரமூா்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் வழிபட்டனா். நிகழ்ச்சியில் திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.