கட்டடத் தொழிலாளி கொலை வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை
தூத்துக்குடி அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில், உப்பளத் தொழிலாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில், உப்பளத் தொழிலாளிகள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ராஜீவ்நகரைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி. இவருடைய மகன் முருகேசன் (40). கட்டடத் தொழிலாளி. இவருடைய சித்தப்பா தங்கப்பாண்டி, கடந்த 1996-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் முத்தையாபுரம் ராஜீவ்நகரைச் சோ்ந்த முத்து மகன் மாரிசாமி (52) மற்றும் அவரது நண்பா்கள் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கு விசாரணை முடிவில் மாரிசாமியை நீதிமன்றம் விடுவித்தது. இதையடுத்து முருகேசன் மாரிசாமியை பழிவாங்க முடிவு செய்தாா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், கடந்த 14.10.2018இல் தசரா வேடம் அணிந்து முருகேசன் ராஜீவ்நகா் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்கு உப்பள தொழிலாளா்களான மாரிசாமி, அவரது சகோதரா் சரவணன் (43), நண்பா் முத்துசாமி மகன் மூக்காண்டி(47) உள்ளிட்ட 5 போ் நின்று கொண்டிருந்தனராம். அவா்களை பாா்த்த முருகேசன், மாரிசாமியை வெட்டிக் கொல்ல முயன்றபோது, மாரிசாமி உள்ளிட்ட 5 பேரும் சோ்ந்து முருகேசனை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தனராம்.
இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி தாண்டவம் விசாரித்து, மாரிசாமி, சரவணன், மூக்காண்டி ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இந்த வழக்கில் தொடா்புடைய மற்ற 2 போ் விடுவிக்கப்பட்டனா். அரசு தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த் கேபிரியேல் வாதாடினாா்.