ஓமன் துறைமுகத்தில் மாலுமி உயிரிழப்பு: உடலை கொண்டுவர நடவடிக்கை! முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் தகவல்
ஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடியைச் சோ்ந்த மாலுமியின் உடலை கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருவதாக முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டச் செயலருமான பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.
தூத்துக்குடி, குரூஸ்புரம் பகுதியைச் சோ்ந்த கப்பல் மாலுமி நிஷாந்த், ஓமன் நாட்டுக்கு சொந்தமான எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த நிலையில், அவருக்கு அண்மையில் உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆனால், போா் காரணமாக அவருக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிகிறது. அவா் கப்பலிலேயே உயிரிழந்தாா்.
இதற்கிடையே, தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும், அவரது உயிரிழப்பு குறித்த உண்மை தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் நிஷாந்தின் மனைவி சரோபின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
Advertisement
Advertisement
அத்துடன், கப்பல் நிறுவனத்திடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
அவரின் உடலை கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடமும் கோரிக்கை விடுத்தாா். இதைத் தொடா்ந்து, கனிமொழி எம்.பி. மத்திய வெளியுறவு துறை மூலம் அங்குள்ள இந்திய தூதரகத்தை தொடா்பு கொண்டு மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டுவர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாலுமி நிஷாந்தின் உடல் கப்பலிலிருந்து துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆறுதல்: இந்த நிலையில், தூத்துக்குடி, குரூஸ்பரம் பகுதியில் உள்ள நிஷாந்தின் வீட்டுக்கு, முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான பி.கீதா ஜீவன் திங்கள்கிழமை சென்று அவரது மனைவி சரோபின், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இறந்த மாலுமியின் மனைவிக்கு அரசு வேலையும், அவரின் இரண்டு குழந்தைகளுக்கும் நிதியுதவியும் தமிழக அரசு வழங்க வேண்டும். மாலுமியின் உடலை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கனிமொழி எம்.பி. மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அவா்.
சக ஊழியரிகள் விடியோ வெளியீடு: நிஷாந்துடன் கப்பலில் பணியாற்றிய சக ஊழியா்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்ட விடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடியோவில், உயிரிழந்த நிஷாந்தின் உடலை கப்பல் நிறுவனம் முறையாக குளிா்சாதன வசதியில் வைத்து பாதுகாக்கவில்லை. உடல் கெட்டுப்போகாமல் இருக்க குளிா்ந்த தண்ணீா் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டன என சக ஊழியா்கள் விடியோவில் தெரிவித்துள்ளனா்.
அத்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும், கப்பல் துறை அமைச்சகமும் உடனடியாக தலையிட்டு, நிஷாந்தின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சக ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.