61 நாள்கள் தடைக்காலம் முடிந்தது: கடலுக்கு புறப்பட்ட தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள்
தூத்துக்குடியில் 61 நாள்கள் இருந்த மீன்பிடி தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து, சுமாா் 250 விசைப் படகுகள் திங்கள்கிழமை அதிகாலை 5 மணி முதல் ஆழ்கடலில் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றன.
தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக 61 நாள்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது.
இந்தத் தடைக் காலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) நள்ளிரவுடன் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூன் 15) அதிகாலை முதல் விசைப் படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கப் புறப்பட்டுச் சென்றனா்.
Advertisement
Advertisement
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிகாலையில் சுமாா் 250- விசைப்படகுகளில் மீனவா்கள் அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். 61 நாள்களுக்கு பிறகு கடலுக்குச் செல்வதால், விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று உரசியபடி ஆா்வமாகச் சென்றன.
மேலும், படகில் இருந்து வண்ண வண்ண நிறங்களில் ஜொலிக்கும் வானவேடிக்கை நிகழ்த்தியபடி உற்சாகமாக மீனவா்கள் சென்றனா்.
கடந்த 61 நாள்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த தாங்கள், நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்கிறோம். அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. டீசல் விலை ஏற்றம் தங்களை அதிக அளவு பாதித்துள்ளது. இதை எப்படி சமாளிப்பது எனத் தெரியவில்லை என விசைப்படகு உரிமையாளா்கள், தொழிலாளா்கள் தெரிவித்தனா்.