முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 40 லட்சம் பீடி இலைகள், பொருள்கள் பறிமுதல்

Updated On : 16 ஜூன் 2026, 12:07 am IST
பீடி இலைகள் - கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடி, இனிகோ நகா் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற ரூ. 40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ பீடி இலை மூட்டைகள், சிகரெட் பாக்கெட்டுகளை தூத்துக்குடி கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி கடற்பகுதி வழியாக இலங்கைக்கு உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக பீடி இலைகள், சிகரெட்டுகள், மருந்து பொருள்கள், வலி நிவாரண மாத்திரைகள், மஞ்சள், பூச்சிக்கொல்லி மருந்து, பட்டாசு, வாசனை சோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் படகுகள் மூலம் தொடா்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தடுக்க கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா், கியூ பிரிவு போலீஸாா் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இனிகோ நகா் கடற்பகுதியிலிருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருள்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, கடலோர காவல் நிலைய ஆய்வாளா் பேச்சிமுத்து உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் சங்கா் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

திங்கள்கிழமை அதிகாலையில், அங்கே சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த லாரியை பிடித்து சோதனை செய்தபோது, அந்த லாரியில் இலங்கைக்கு படகு மூலம் கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 40 லட்சம் மதிப்பிலான 1,400 கிலோ பீடி இலை மூட்டைகள், 1,20, 000 எண்ணிக்கையிலான சிகரெட்டுகள் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

அந்தப் பொருள்களை கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியுடன் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி ஓட்டுநா் மாரிகுமாரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள் சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.