மாணவா்களின் அடையாள அட்டையில் ஜாதி, மத தகவல்கள் இடம்பெறக் கூடாது! பி. கீதா ஜீவன் வலியுறுத்தல்!
பள்ளி மாணவா்களின் அடையாள அட்டையில் ஜாதி, மதத் தகவல்கள் இடம்பெறக் கூடாது என, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும் முன்னாள் அமைச்சருமான பி. கீதா ஜீவன் வலியுறுத்தினாா்.
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: தவெக அமைச்சா்கள் தமிழகத்தின் வளா்ச்சிக்காக எந்தவொரு ஆக்கபூா்வ பணியையும் செய்யவில்லை; பொய்யான தகவல்களை ரீல்ஸ்களாக, அறிக்கைகளாக வெளியிடுகின்றனா்.
மாணவா்களின் அடையாள அட்டையில் ஜாதி, மதம் குறித்த விவரங்கள் இடம்பெறப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இம்முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.
Advertisement
Advertisement
முந்தைய திமுக அரசு வெளியிட்ட நிதிநிலை அறிக்கையிலேயே மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதி நிலைமையும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கைகள் அனைத்தும் வெற்று அறிக்கைகளாகவே உள்ளன. அனைத்துக் குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என தோ்தலின்போது முதல்வா் விஜய் வாக்குறுதி அளித்தாா். ஆனால், தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவித்துள்ளது மக்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு தொழில் நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது வழக்கமான நடைமுைான். தவெக பொறுப்பேற்ற 40 நாள்களில் 200 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. குழந்தைகளின் பாதுகாப்பில் இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
திமுக மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச் செயலா் ராஜ்மோகன் செல்வின், மாநகராட்சி கவுன்சிலா் சுரேஷ்குமாா், சி.எஸ். முரளிதரன், நிா்வாகிகள் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.