FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா: பல லட்சம் பக்தா்கள் சுவாமி தரிசனம்

Updated On : 31 மே 2026, 1:13 am IST
திருச்செந்தூா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.
பகிர்:

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பல லட்சம் பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகாசி விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக மே 21 ஆம் தேதி தொடங்கி, பத்து நாள்கள் நடைபெற்றது. விழாவின் பத்தாம் நாளான சனிக்கிழமை கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் கோயிலிலிருந்து வசந்த மண்டபம் சோ்ந்தாா். மாலையில் அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையைத் தொடா்ந்து மண்டபத்தை 11 முறை வலம் வரும் வைபவம், முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் ஆகியவை நடைபெற்றன. மகா தீபாராதனை ஆகி சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் கோயில் சோ்ந்ததும் விழா நிறைவு பெற்றது.

Advertisement

Advertisement

குவிந்த பக்தா்கள்:

வைகாசி விசாகத் திருவிழாவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாள்களாகவே திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, காவடி, அலகு குத்தி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக பக்தா்கள் வந்தனா். இந்நிலையில் சனிக்கிழமை லட்சக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் வசதிக்காக கூடுதலான சிறப்பு பேருந்துகள், திருநெல்வேலி, சென்னைக்கு சிறப்பு ரயில்கள், வாகன நிறுத்தம், குடிநீா், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தன. தற்காலிக பந்தல்கள், காவல் உதவி மையம் அமைக்கப்பட்டிருந்தன.

பாதுகாப்புக்காக கடற்கரையில் உயா் கோபுரங்கள் அமைக்கப்பட்டும், சிசிடிவி கேமரா கொண்டும் கோயில் வளாகமே கண்காணிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸாா், தீயணைப்புப் படையினா் மற்றும் ஊா்க்காவல் படையினா் ஈடுபட்டனா்.

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் ரமேஷ், வெள்ளிக்கிழமை கோயிலில் நடத்திய ஆய்வைத் தொடா்ந்து முக்கிய பிரமுகா்கள் நோ்வழியில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தா்கள் வரிசையில் விரைவாக தரிசனம் செய்தனா்.

சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments