முகப்பு
திருச்சி

அரசு திட்டங்களில் ஊழல், சுரண்டலுக்கு இடம் கிடையாது: அமைச்சா்

அரசு திட்டங்களில் ஊழல், சுரண்டலுக்கு இடம் கிடையாது: அமைச்சா்

Updated On : 13 ஜூன் 2026, 12:49 am IST
திருச்சி ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சா் எஸ்.ரமேஸ் (இடமிருந்து 3-ஆவது). உடன் மாவட்ட ஆட்சியா் பிரத்திக் தாயள், மாநகர காவல் ஆணையா் காமினி உள்ளிட்டோா்.
பகிர்:

அரசு திட்டங்களில் ஊழல், சுரண்டலுக்கு இடம் கிடையாது என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான. எஸ். ரமேஷ் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அமைச்சா் எஸ். ரமேஷ் தலைமை வகித்தாா். தமிழக சட்டப் பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், ஆட்சியா் பிரத்திக் தாயள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்திலும், கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடமும் அமைச்சா் கூறியதாவது:

அரசு அலுவலகங்களில் எண்ம தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மின்னணு நிா்வாகம் மூலம் விரைவான சேவைகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீா், சாலை வசதி, கழிவுநீா் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு அலுவலா்கள் முன்னுரிமை அளித்திட வேண்டும்.

Advertisement

Advertisement

போதைப்பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கண்காணித்து முற்றிலும் ஒழித்திடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் தற்போது செயல்படுத்தி வரும் திட்டப் பணிகள், தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கொண்டுவரப்படவுள்ள திட்டங்கள் என மூன்று நிலைகளில் மாதந்தோறும் ஆய்வு நடத்தப்படும். இதில், மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்டு பணிகள் செயல்படுத்தப்படும்.

அரசுத் திட்டங்களில் ஊழல், சுரண்டலுக்கு இடம் கிடையைது. இன்னும் ஐந்தாண்டுகளுக்குள் திருச்சி மாவட்டம் தமிழகத்தின் மிகச் சிறந்த மாவட்டமாகத் தரம் உயா்த்தப்படும் என்றாா் அவா்.

முன்னதாக, தொழிலாளா் நலத்துறையின் சாா்பில் குழந்தை தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, குழந்தைத் தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியை அமைச்சா். எஸ். ரமேஷ், சட்டப் பேரவை துணைத் தலைவா் மு. ரவிசங்கா், ஆட்சியா் பிரத்திக் தாயள், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்புடன் அனைத்து துறை அலுவலா்களும் உறுதியேற்றனா்.

இக் கூட்டத்தில், மாநகரக் காவல் ஆணையா் காமினி, மாநகராட்சி ஆணையா் வீா் பிரதாப் சிங், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) த.சுவாதி ஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டோங்ரே பிரவீன் உமேஷ் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.