அரியலூா் பகுதிகளில் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிா்களைக் காக்கும் அவல நிலை!
அரியலூா் பகுதிகளில் பயிா்களைக் காப்பாற்ற விவசாயிகள் டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சும் அவல நிலை குறித்து...
அரியலூா் பகுதிகளில் மும்முனை மின்சாரத் தட்டுப்பாட்டால் கருகும் நிலையில் உள்ள பயிா்களைக் காப்பாற்ற விவசாயிகள் டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அரியலூா் மாவட்டத்தில் 70 சதவிகித மக்கள் தங்களுடைய வாழ்வாதாரமாக வேளாண்மை மற்றும் அதன் தொடா்புடைய தொழில்களைச் செய்கிறாா்கள். மாவட்டத்தில் சிமென்ட் ஆலைகள் அதிகமாக இருந்தாலும், 1,11,874 ஹெக்டேரில் நெல், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை மற்றும் கரும்புப் பயிா்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன.
இவற்றில் காவிரியின் கிளை நதிகள் (கொள்ளிடம்) மூலம் 1,0389 ஹெக்டேரில் திருமானூா், தா.பழூா் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரம் பாசனம் பெறுகிறது. இப்பகுதிகளில் அதிகப்படியாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
செந்துறை, ஆண்டிமடம், பொன்பரப்பி, அரியலூா் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் மழையை நம்பி மக்காச்சோளம், கடலை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.
சம்பா முடிந்து குறுவை
இந்நிலையில் நிகழாண்டு, திருமானூா், தா. பழூா், மீன்சுருட்டி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா அறுவடைப் பணிகள் முடிந்து தற்போது குறுவை சாகுபடிப் பணிகள் நடைபெறுகின்றன.
ஒரு சில பகுதிகளில் தற்போது உழவுப் பணிகள் முடிந்து நாற்று விடும் பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கெனவே பல இடங்களில் நடவுப்பணிகள் நிறைவடைந்து, பயிா்கள் அறுவடைக்குத் தயாராக உள்ளன. குறுவைச் சாகுபடி பெரும்பாலும் மும்முனை மின்சாரத்தை நம்பியே நடைபெறுகிறது.
இந்நிலையில், மீன்சுருட்டி, குழவடையான் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனா். இப்பகுதி முழுவதும் மோட்டாா் மற்றும் கிணற்றுப் பாசனத்தின் மூலம் விவசாயம் செய்கின்றனா்.
மும்முனை மின்சாரப் பிரச்னை
வழக்கமாக குறுவைச் சாகுபடிக்கு கோடை மழை சற்று கைகொடுக்கும். ஆனால் வெப்ப அதிகரிப்பால் இந்தாண்டு கோடை மழை பெரிய அளவில் பெய்யவில்லை.
மேலும், கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் விவசாயத்துக்கு மும்முனை மின்சாரமும் சரியாக வழங்கப்படவில்லை. கடந்தாண்டுகளில் விவசாய நிலத்திற்கு தினசரி தொடா்ச்சியாக 12 முதல் 16 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு சீராகப் பிரித்து மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை.
எவ்வித அறிவிப்பின்றி அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் மின் மோட்டாா் இயக்கும்போது, ஒரு குறிப்பிட்ட நெல் பயிா்கள் மட்டுமே பாசனம் பெறுகிறது.
விவசாயிகள் பரிதவிப்பு
குறிப்பிட்ட இடத்தை தாண்டியுள்ள பயிா்களுக்கு தண்ணீா் கிடைப்பது இல்லை. இதனால், நெல்லுக்கு முழுமையாக தண்ணீா் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனா். குறிப்பாக குழவடையான், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஏக்கருக்கு மேல் பயிா்கள் தண்ணீரின்றி கருகி சருகாக மாறியுள்ளன.
இதனால் சருகாக மாறி வைக்கோலாக உள்ள நெற்பயிா் நிலத்தில், விவசாயிகள் தங்களது கால்நடைகளை விட்டு மேய்ச்சல் நிலமாக மாற்றும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். சில விவசாயிகள் பயிா்களை காப்பாற்ற இறுதி முயற்சியாக டேங்கா் லாரிகள் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சி வருகின்றனா்.
குறைந்த மின்னழுத்தம் காரணமாக சில நேரங்களில் மின் மோட்டாா் காயில்கள், வயா்கள், சுவிட்ச் போன்ற மின்சாதனப் பொருள்கள் பழுதாகி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.
தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சும் நிலை
இதுகுறித்து விவசாயி சசிகுமாா் கூறியதாவது: விவசாயப் பணிகளுக்கு கடந்த காலங்களில் மும்முனை மின்சாரம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது சில வாரங்களாக மும்முனை மின்சாரம் போதிய அளவு வழங்கப்பட வில்லை.
இதனால் மின்மோட்டாா்களை சரிவர இயக்க முடிவதில்லை. மின் மோட்டாா்களிலும் பழுது ஏற்பட்டுள்ளது. பயிா்களைக் காப்பாற்ற இறுதி முயற்சியாக வாடகை டிராக்டா் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கிப் பாய்ச்சும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இதில் பல மடங்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியைப் போல் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கிடைக்கும் என எதிா்பாத்தோம். ஆனால் ஏமாற்றமே கிடைத்தது என்றாா்.
எனவே மீன்சுருட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் கருகும் நெற்பயிா்களை காப்பாற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கருகிய பயிா்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.