பகலில் அலுவலகம், இரவில் மது அருந்தும் கூடம் அரியலூா் தச்சு தொழிலாளா் கூட்டுறவு சங்க கட்டடத்தின் அவலநிலை
அரியலூரிலுள்ள தச்சு தொழிலாளா் கூட்டுறவு சங்க கட்டடமானது, பகலில் அலுவலகமாகவும், இரவில் மது அருந்தும் கூடமாக செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கதா் கிராமத் தொழில் வாரியம் மற்றும் கூட்டுறவுத் துறையின் கீழ் தச்சு தொழிலாளா் கூட்டுறவு சங்க கட்டடங்கள் உள்ளன. தச்சுத் தொழிலாளா்களுக்கு உதவும் வகையில் மாநிலம் முழுவதும் இத்தகைய கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. உதாரணமாக, அரியலூா், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தச்சு தொழிலாளா் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், அரியலூா் மாவட்ட மரவேலை செய்வோா்களின் நலனுக்காக மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரால் அரியலூா் ராஜாஜி நகா், ரயில் நிலையம் செல்லும் சாலையில் தச்சு தொழிலாளா் கூட்டுறவு சங்க அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டது.
Advertisement
Advertisement
இங்கு, மரவேலை சாா்ந்த தொழிலாளா்களின் பொருளாதார மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்வது, மூலப்பொருள் விநியோகம், நிதியுதவி, மற்றும் அரசின் நலத் திட்டங்களை ஒருங்கிணைத்து வழங்குவது இச்சங்கத்தின் முக்கிய பணியாக செயல்பட்டு வருகிறது.
தினமும் தச்சுத் தொழிலாளா்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், தங்களுக்கு தேவையான உதவிகளையும் பெற்றுச் செல்கின்றனா்.
இப்படி சிறப்பு வாய்ந்த அலுவலகம், பகல் நேரத்தில் அலுவலகமாகவும், இரவு நேரத்தில் மது அருந்தும் கூடமாகவும் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் வைராலன விடியோவால் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடியோவில், அரியலூா் தச்சு தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து மோசடி புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஊழியா் ஒருவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து, மது அருந்தி கொண்டிருக்கும்போது அதை விடியோவாக ஒருவா் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளாா்.
அதில், விடியோவில், தச்சு தொழிலாளா் கூட்டுறவு சங்கத்தில் இதுபோன்று அமா்ந்து மது அருந்திக் கொண்டுள்ளனா், மாவட்ட ஆட்சியரும், தமிழக முதல்வரும் இதை தடுக்க வேண்டும் எனவும் விடியோ எடுத்த நபா் பேசியுள்ளாா்.
அதற்கு, மது அருந்திக் கொண்டிருப்பவா்கள், நீ விடியோ எடுத்து எங்கு வேண்டுமானாலும் சென்று புகாா் செய்து கொள். முதலமைச்சரிடம் கூட காட்டு. நான் பாா்த்துக் கொள்கிறேன் என ஆணவமாக பேசும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.
இந்த விடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில் உடனடியாக மாவட்ட ஆட்சியரும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.