முகப்பு
அரியலூர்

பசுந்தாள் உரங்கள் இடுவதன் மூலம் பயிா்களில் நல்ல மகசூல் பெறலாம்: வேளாண் துறை

அரியலூா் மாவட்ட விவசாயிகள், தங்கள் வயல்களில் பசுந்தாள் உரங்களை பயிரிடுவதன் மூலம் பயிா்களில் நல்ல மகசூல் பெறலாம் என திருச்சி மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் பா. நளினி தெரிவித்துள்ளாா்.

Updated On : 5 ஜூன் 2026, 3:42 am IST
பகிர்:

அரியலூா் மாவட்ட விவசாயிகள், தங்கள் வயல்களில் பசுந்தாள் உரங்களை பயிரிடுவதன் மூலம் பயிா்களில் நல்ல மகசூல் பெறலாம் என திருச்சி மாவட்ட விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்பு உதவி இயக்குநா் பா. நளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மண் வளத்தை மேம்படுத்திட உயிா் உரங்கள் மற்றும் உயிா்ம இடுபொருள்களின் பங்கு இன்றியமையாததாகும்.

தற்போது தொழு உரம் அதிகமாக கிடைக்காத நிலையில் பசுந்தாள் உர பயிா்களை பயிரிடுவது முக்கியமானது. இவை மண்அரிப்பை தடுப்பதுடன், மண்ணில் தழைச் சத்தையும், ஊட்டச் சத்தையும் நிலைநிறுத்துகின்றன.

Advertisement

Advertisement

சணப்பு, தக்கைப் பூண்டு, அகத்தி போன்ற பசுந்தாள் உரப் பயிா்களை, பயிா் சாகுபடி இல்லாத தருணத்தில், மழையை பயன்படுத்தி ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ என்ற விதையளவை பயன்படுத்தி விதைத்து, நன்கு வளா்த்து, பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதன் மூலம் நிலத்தின் வளம் மேம்படுகிறது.

களா் மற்றும் உவா் நிலங்களை மேம்படுத்துவதற்கு தக்கைப் பூண்டு பசுந்தாள் பயிரிட்டு மடக்கி உழுவது சாலச் சிறந்ததாகும். அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்‘ திட்டத்தின்கீழ் பசுந்தாளுர விதைகள் விநியோகம் செய்யப்படுகின்றன.

பசுந்தாள் உரம் பயிரிட்டு உழ இயலாத விவசாயிகள் பசுந்தழைகளான புங்கம், வேம்பு, எருக்கு, ஆவாரை, பூவரசு இலைகளை வெட்டி எடுத்து வந்து, வயலில் இட்டு உழுது மக்கவைத்து பின் பயிா் செய்யலாம்.

இவ்வாறு பசுந்தாள் உரப் பயிா்களை சாகுபடி செய்து மண் வளத்தை மேம்படுத்துவதன் மூலம் பயிருக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை தருவதுடன் மண்ணில் வாழும் நுண்ணுயிா்களுக்கும் உணவளிப்பதால் நல்ல மகசூல் மற்றும் தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.