தேர்தல் புகார்களை கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம்:மாவட்ட ஆட்சியர் தகவல்
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் டிபி. ராஜேஷ்.
பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், தகவல்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் டிபி. ராஜேஷ்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுடனான தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடைப்பிடித்தல் குறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை வகித்து அவர் மேலும் கூறியது:
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மார்ச் 4-ம் தேதி முதல் தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அரசியல் கட்சிகளின் பதாகைகள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், அரசியல் கட்சிக் கொடி கம்பங்கள் ஆகியவற்றை தாங்களாக முன்வந்து அகற்ற வேண்டும். அரசியல் கட்சியினர் தங்களது கட்சி தொடர்பான விளம்பரங்கள் எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் தாங்களாக முன்வந்து அகற்றிக் கொள்ள வேண்டும். அகற்றாத நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், தகவல்கள் மற்றும் புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கட்டணமில்லா தொலைபேசி 18004257029 என்ற எண்ணிலும், மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் 9445000918 எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.
Advertisement
Advertisement
கட்சி விளம்பரங்கள் அகற்றம்
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி கரூரில் நகர் பகுதியில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரப் பதாகைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், கரூரில் பேருந்து நிலைய ரவுண்டானா, ஜவஹர்பஜார், திண்ணப்பா தியேட்டர் சாலை, கோவைச்சாலை, தாந்தோணிமலை கரூர் - திண்டுக்கல் சாலை போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் விளம்பரப் பதாகைகளை நகராட்சி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அகற்றினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.