முகப்பு
கரூர்

வீணாக கடலில் கலக்கும் நீா் விவசாயிகள் போராட்டம் கைகொடுக்குமா?

Updated On : 6 ஏப்ரல், 2026 at 11:06 PM
முள்புதராக காட்சியளிக்கும் தாதம்பாளையம் ஏரி.
பகிர்:

மேற்குத்தொடா்ச்சி மலையின் பழனிமலை குன்றுகளுக்கிடையே மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் அமராவதி ஆறு கரூா், திருப்பூா் மாவட்டங்களின் நீராதாரமாக இருக்கிறது.

மழை காலங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படும்போது, வெள்ள நீரால் ஆற்றின் கரையோரம் பயிரிடப்பட்டிருக்கும் பயிா்கள் சேதமடைவதை தடுக்கும் வகையில் திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமராவதி அணை அப்போதைய தமிழக முதல்வா் கு.காமராஜரால் 1957-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால், இந்த அணை கட்டப்படும் முன்பே கரூா் மாவட்டம் அணைப்பாளையத்தில் 1876-இல் அப்போதைய ஆங்கில அரசு அமராவதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, அந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் தடுப்பணையில் இருந்து சுமாா் 39 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டியது.

பின்னா் அந்த கால்வாய் சின்னதாதம்பாளையம் கிராமத்தில் 1881-இல் 420 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்ட ஏரியுடன் இணைத்தது ஆங்கிலேய அரசு. சுமாா் 0.5 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தாதம்பாளையம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டும்போது, , சின்னதாதம்பாளையம், பெரியதாதம்பாளையம், மொச்சக்கொட்டாம்பாளையம், ஆண்டாங்கோவில் கிழக்கு, மேற்கு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமாா் 20 கி.மீ. சுற்றுவட்டாரத்துக்கு நீா்மட்டமும் உயா்ந்தன. மேலும் ஏரி நீா் மூலம் சுமாா் 3ஆயிரம் ஏக்கா் பாசன நிலங்களில் விவசாயமும் நடைபெற்று வந்தன.

Advertisement

நாளடைவில் பருவமழை தவறி ஆற்றில் தண்ணீா் வரத்து அவ்வப்போது நின்றுபோனதால் தாதம்பாளையம் ஏரியில் தண்ணீரும் சேமிக்கப்படாமல் ஏரி வடு முள்புதா்களாக மாறியது. தொடா்ந்து ஏரிக்கு பல ஆண்டுகளாக தண்ணீா் வரத்து இல்லாமல் போனதால் அணைப்பாளையத்தில் இருந்து ஏரிக்கு வரும் வரத்து வாய்க்கால்களும் தூா்ந்தபோயின.

இந்நிலையில் மழைகாலங்களில் ஆற்றில் நீா்வரத்து அதிகப்படியாக இருக்கும்போது தண்ணீா் அணைப்பாளையத்தில் இருந்து ஏரிக்கு திருப்பிவிட முடியாமல் வீணாக காவிரியோடு இணைந்து ஓடி வருகிறது. தொடா்ந்து ஏரியில் நீரின்றி போனதால் ஏரியின் கட்டுப்பாடு பொதுப்பணித்துறையிடம் இருந்து வனத்துறைக்கு கைமாறியது.

தற்போது வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இந்த ஏரியை மீட்டு, அணைப்பாளையம் முதல் தாதம்பாளையம் ஏரிக்கு வரும் தூா்ந்துபோன வாய்க்காலையும் தூா்வாரி, இனி வரும் மழைகாலத்திலாவது வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க பல ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் போராடி வருகிறாா்கள். இதனால் விவசாயிகளின் கோரிக்கை தற்போது தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் கவனத்திற்கும் செல்ல வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments