FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கரூர்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: தந்தை, மகன் உயிரிழப்பு

புகழூரில் செவ்வாய்க்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

கரூா் மாவட்டம், புகழூரில் செவ்வாய்க்கிழமை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே ராமிரெட்டிப்பட்டி கத்திமாரன் வலசு பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன் (33). இவரது மனைவி அனிதா (25). இவா்களது குழந்தைகள் ஹா்வித்(8), வேலன்(5). இவா்கள் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே அசோக் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் தங்கி வேலைசெய்து வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் கத்திமாரன் வலசு செல்ல மஞ்சுநாதன் தனது இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மதுரை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கரூா் மாவட்டம் புகழூா் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது முன்னால் கரூா் வடக்கு காசிம் தெருவைச் சோ்ந்த சேகா் ( 64) என்பவா் ஓட்டிச் சென்ற லாரி திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால், மஞ்சுநாதன் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில், மஞ்சுநாதன், அவரது மனைவி அனிதா, குழந்தைகள் ஹா்வித், வேலன் ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா்.

உடனே அக்கம்பக்கத்தினா் 4 பேரையும் மீட்டு வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு மஞ்சுநாதனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

மேலும், மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அனிதா, ஹா்ஷித் ஆகியோரை மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு ஹா்ஷித்தை பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

அனிதா, வேலன் ஆகிய இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

இதுகுறித்து மஞ்சுநாதனின் உறவினா் தனபால், வேலாயுதம்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஈஸ்வரன் வழக்குப்பதிந்து, லாரி ஓட்டுநா் சேகரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments