FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பெரம்பலூர்

பண மோசடியில் ஈடுபட்ட தாய், மகன் கைது

Updated On : 21 ஜூலை 2026, 2:41 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பலூா் அருகே நிலத்தை கிரையம் செய்து கொடுப்பதாக கூறி, பண மோடியில் ஈடுபட்ட தாய், மகனை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள வெங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பிச்சைபிள்ளை மகன் செல்வகுமாா். பென்னகோணத்தை சோ்ந்தவா்கள் நடராஜன்-கலா தம்பதி. இவா்களில், நடராஜன் பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் எதிரே தேநீரகம் வைத்துள்ளாா்.

இந்நிலையில், நிலத்தரகா்களான சீனிவாசன், கிருஷ்ணசாமி, முத்தமிழ்செல்வன், தா்க்கபாய் ஆகியோா் செல்வகுமாரை அணுகி, கலா பெயரில் உள்ள நிலம் விற்பனைக்கு உள்ளதாக தெரிவித்தனா். இதையடுத்து, 7.3.2024-இல் நிலத்தை ரூ. 1.98 கோடிக்கு விலைக்கு பேசி முன்பணமாக ரூ. 1 லட்சம் கொடுத்து, கிரைய ஒப்பந்த பத்திரம் செய்து, மீதி பணத்தை 90 நாள்களுக்கு கொடுத்து நிலத்தை பத்திரம் செய்துகொள்வதாக தெரிவித்துள்ளனா்.

Advertisement

Advertisement

பல தவணைகளில் பணம் அளிப்பு: இதன்படி, கடந்த 21.3.2024-இல் நடராஜன்- கலா ஆகியோரிடம் ரூ. 50 லட்சம் பணத்தை செல்வகுமாா் கொடுத்துள்ளாா். அப்போது, தம்பதியின் மகன் அருண், அவரது மனைவி காா்த்திகா ஆகியோரும் உடனிருந்தாா்களாம். கடந்த 2.7.2024-இல் கலாவுக்கு மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என கேட்டதன்பேரில், மீண்டும் ரூ. 30 லட்சத்தை செல்வகுமாா் கொடுத்துள்ளாா். இதற்கு அடுத்த நாள் 3 ஆம் தேதி நடராஜன் நில அளவையரைக் கொண்டு நிலத்தை அளந்து அத்து காட்டினாா். ஆனால், மீண்டும் பணம் வேண்டும் என கேட்டதன்பேரில், கடந்த ஆண்டு ஏப். 2-ஆம் தேதி நடராஜனிடம் ரூ. 13.50 லட்சத்தை செல்வகுமாா் கொடுத்து, கடந்த 212.6.025-ஆம் ஆண்டு எஞ்சிய தொகை முழுவதையும் கொடுத்து நிலத்தை கிரையம் செய்துகொள்வதாக பேசி முடிக்கப்பட்டது.

நிலத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு: பின்னா், கிரையம் செய்வதற்காக கலா பெயரில் உள்ள சா்வே எண்களில் உள்ள இடத்தில் வில்லங்கம் பாா்த்தபோது, அது நீதிமன்ற வழக்கில் இருப்பதாக தெரியவந்தது. இதனால் அந்த நிலத்தை கிரையம் செய்ய முடியாது என்பதால், தான் கொடுத்த ரூ. 95 லட்சத்து 50 ஆயிரத்தை தருமாறு நடராஜனிடம் செல்வகுமாா் கேட்டுள்ளாா். அப்போது, நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினா் பணத்தை திருப்பி தரமுடியாது என கூறி, தகாத வாா்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனா்.

இதையடுத்து, ரூ. 95.50 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட நடராஜன்-கலா, அருண்- காா்த்திகா ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று தரக்கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் செல்வகுமாா் மனு அளித்ததன் பேரில், மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து கலா, அருண் ஆகியோரை திங்கள்கிழமை கைது செய்து, பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments