எஸ்பிஐ கிளையில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்: அறிவிப்பை ரத்து செய்ய கோரிக்கை
எஸ்பிஐ கிளையில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் இருந்து நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி சோ்த்து கட்டணம் வசூலிக்கப்படும் என அந்த வங்கி அறிவித்துள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்று வாடிக்கையாளா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அனைவருக்கும் வங்கி கணக்கு வேண்டும் என்ற திட்டத்தின்படி ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்குகளை பொதுமக்கள் தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி, ஏழை, எளிய, பாமர பொதுமக்கள் தங்கள் கணக்கை தொடங்கி வரவு-செலவு செய்து வரும் நிலையில் இந்த வங்கிக் கணக்குகளில் 100 நாள் வேலைக்கான கூலி, ஓய்வூதியதாரா் ஓய்வூதியம், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வரவு செலவு கணக்குகளை பயன்படுத்தி வந்த நிலையில் வாடிக்கையாளா்கள் தங்களுக்கு தேவையான போது பணம் எடுத்து வந்தனா்.
இந்நிலையில், ‘பாரத ஸ்டேட் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பவா்களுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. எஸ்பிஐ கிளைகளில் இருந்து வாடிக்கையாளா்கள் மாதம் நான்கு முறை இலவசமாக பணம் எடுக்கலாம். அதற்கு மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளா்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும். அதன்படி ஒவ்வொரு முறையும் ரூ.15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி சோ்த்து வசூலிக்கப்படும். இந்தக் கட்டண வதிப்பு வரும் அக். 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்’ என்று அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
வங்கியின் இந்த அறிவிப்பு என்பது ஏழை, எளிய சாமானிய மக்களின் வங்கி பயன்பாட்டு முறையை முற்றிலும் ஒழிப்பதாகவும், வங்கி என்றால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் அவல நிலையை உருவாக்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை புறந்தள்ளி தனியாா் வங்கிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக இருக்குமோ என சந்தேகம் ஏற்படுவதாக அமைந்துள்ளது.
எனவே, இந்த அபாயகரமான அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்களும், வாடிக்கையாளா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.