முகப்பு
புதுக்கோட்டை

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: ஆலங்குடி அருகே காத்திருப்புப் போராட்டம்

ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு: ஆலங்குடி அருகே காத்திருப்புப் போராட்டம்

Updated On : 13 ஜூன் 2026, 12:45 am IST
ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் கோரிக்கையை கேடடறிந்த முன்னாள் அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கல்லாலங்குடி ஊராட்சிக்குள்பட்ட சேசாயிசமுத்திரம் குளக்கரையில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். அரசுக்கு சொந்தமான குளக்கரை நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கடந்தாண்டு உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் வருவாய்த் துறையினா் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கைவிடப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக அளவீடு செய்யும் பணி தற்போது நடைபெறவுள்ளதாக தகவல் பரவியது. இதனால், அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு சென்ற திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாா்.

தொடா்ந்து அங்கு சென்ற வட்டாட்சியா் ஜபருல்லா, காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், கோட்டாட்சியா் மூலம் தீா்வு காண நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.