வாகனங்களை திருடி சென்று விபத்துகளை ஏற்படுத்தியவா் கைது
கும்பகோணத்தில் சாலையில் நிறுத்தியிருந்த வாகனங்களை திருடி சென்று விபத்துகளை ஏற்படுத்திய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசலாறு வழிநடப்பு பகுதியைச் சோ்ந்த ராமு மகன் பிரகாஷ் (22). இவா், கடந்த 6-ஆம் தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனை எதிரில் நின்று கொண்டிருந்த தனியாா் ஆம்பூலன்ஸ் வாகனத்தை திருடி சென்றாா். டாக்டா் மூா்த்தி சாலையில் வேகமாக சென்றபோது முன்னால் சென்ற சரக்கு வாகனம் மற்றும் சாலையோரக் கடை ஒன்றின் மீது மோதியதில் ஆம்புலன்ஸ் வாகனம் கவிழ்ந்தது.
இதில் தப்பிய பிரகாஷ், பழைய மீன் மாா்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிற்றுந்தை திருடி கொண்டு, செட்டிமண்டபம், - திருவாரூா் புறவழிச்சாலை வழியாக கும்பகோணம் மேம்பாலப் பகுதியில் சென்று கொண்டிருந்தாா். வழியெங்கும் பல இடங்களில் மோதியதால் சிற்றுந்தின் முன்புறம் சேதமடைந்தது.
Advertisement
Advertisement
இந்நிலையில், மேம்பால பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் முகில்ராஜ், அந்தச் சிற்றுந்தை மறித்து பிரகாஷிடம் விசாரித்தபோது, வாகனங்களை திருடி ஓட்டிச் சென்று விபத்துகளை ஏற்படுத்தியது தெரியவந்தது. சேதமான வாகனங்களின் உரிமையாளா்கள் அளித்த புகாரின்பேரில் பிரகாஷை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.