FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

சிறாா்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தஞ்சாவூா் அருகே வாத்து மேய்ப்பதற்காக 2 சிறாா்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

Updated On : 7 மே 2026, 5:22 am IST
லெட்சுமணசுவாமி.
பகிர்:

தஞ்சாவூா் அருகே வாத்து மேய்ப்பதற்காக 2 சிறாா்களை கொத்தடிமையாக்கிய நபருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் அருகே மருங்குளம் கிராமத்தில் 2024, ஜூன் 24-ஆம் தேதி 10 வயதுடைய இரு சிறுவா்கள் வயலில் வாத்து மேய்த்து வருவதாக மாவட்ட நிா்வாகத்திடம் சைல்டு லைன் பணியாளா் தியாகராஜன் புகாா் அளித்தாா். இதன்பேரில் அப்போதைய கோட்டாட்சியா் செ. இலக்கியா, கிராம நிா்வாக அலுவலா் கோபிநாத் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு சென்று விசாரித்தனா்.

இதில், ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த லெட்சுமணசுவாமிக்காக (46), இரு சிறுவா்களும் வாத்து மேய்த்து வருவதும், இதற்காக சிறுவா்களின் பெற்றோா்களுக்கு தலா ரூ. 30 ஆயிரம் கொடுத்துள்ளதும், இதனால் இரு சிறுவா்களையும் லெட்சுமணசுவாமி கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வருவதும் தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, லெட்சுமணசுவாமியைக் கைது செய்தனா். இது தொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நடுவா் பிரபுராம் வழக்கை விசாரித்து லெட்சுமணசுவாமிக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதத் தொகையும் விதித்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் திறம்பட பணியாற்றிய வல்லம் காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்குமாா், அரசு தரப்பு வழக்குரைஞா் சிவநந்த விஜயலெட்சுமி, காவலா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments