இயற்கை வளங்கள் கொள்ளையை எதிர்க்க வேண்டியது அவசியம்
இயற்கை வளங்கள் கொள்ளையை எதிர்க்க வேண்டியது அவசியம் என்றார் இந்திய கம்யூ. கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு.
இயற்கை வளங்கள் கொள்ளையை எதிர்க்க வேண்டியது அவசியம் என்றார் இந்திய கம்யூ. கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான ஆர். நல்லகண்ணு.
திருச்சியில் சிந்தனைத்தளம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற பறிக்கப்படும் தமிழக வளங்களும்- உரிமைகளும் என்ற தலைப்பிலான தொடர்பொழிவைத் தொடக்கி வைத்து, அவர் மேலும் பேசியது: மதத்தின் பெயரால் ஆட்சி செய்வது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
தாய்மொழி பற்றிய கவலை பலருக்கு இல்லை. இன்றைய நிலையில் மொழிகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். நம் முன்னோர்கள் 5392 ஏரி, குளங்கள், கண்மாய்களை உருவாக்கினார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் 5000 ஏரி, குளங்கள், கண்மாய்களை காணாமல் போக செய்துவிட்டனர்.
நீர் மேலாண்மைத் திட்டத்துக்கு வழிகாட்டிய வகையில் முக்கொம்பு மேலணையைக் கட்டியப் பொறியாளர் சர் ஆர்தன் காட்டன், மலைகளை இணைக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பென்னி குவிக் போன்ற ஆங்கிலேயர்கள் மக்கள் நலன் கருதி அணைகளைக் கட்டினார்கள். ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் மணலைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர். கொள்ளைப் போகும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை நாம் அனைவருக்கும் இருக்கிறது. இயற்கை வளங்கள் கொள்ளை போவதை எதிர்த்து நிற்க வேண்டியது நமது கடமையும், அவசியமும் என்றார்.
கூட்டத்துக்கு முனைவர் கு.திருமாறன் தலைமை வகித்தார். பேராசிரியர் இ.சூசை தொடக்கவுரையாற்றினார். கல்வி அரசியல் என்ற தலைப்பில் இலக்கிய விமர்சகர் வீ.ந. சோமசுந்தரம் பேசினார். மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவேந்தல் உரையை திருக்குறள் சு. முருகானந்தம் வழங்கினார்.
முன்னதாக, சிந்தனைத் தளத்தின் ம. செல்வராஜ் வரவேற்றார். இந்த நிகழ்வில், பைந்தமிழ் இயக்கத்தின் இயக்குநர் பழ.தமிழாளன், பாவாணர் தமிழியக்கத்தின் தமிழகன், பேராசிரியர்கள் செயலாபதி, சதீஷ்குமார், சமூக ஆர்வலர்கள் கே. சந்திரசேகர், ஜி.கே.முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.