துவாக்குடி மாநில மருத்துவக் கல்வி மையத்தைச் சோ்ந்த மேலும் 5 மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்
துவாக்குடியில் உள்ள மாநில மருத்துவக் கல்வி மையத்தில் பயின்ற மேலும் 5 மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி வளாகத்தில் நீட் தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்காக பிரத்யேகமாக மாநில மருத்துவக் கல்வி மையம் செயல்படுகிறது. இங்கு கடந்தாண்டு பயிற்சி பெற்ற தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 74 மாணவா்கள் நீட் தோ்வெழுதி தோ்ச்சி பெற்றிருந்தனா்.
இவா்களில் 28 மாணவா்கள் ஏற்கெனவே தமிழக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெற்றிருந்தனா். இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் மேலும் 5 மாணவா்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி, மாணவி முனியம்மாளுக்கு மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும், சஞ்சய்தரன், தீபிகா ஆகியோருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவா் கனகராஜுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவா் மனோரஞ்சனுக்கு கா்நாடக மாநிலம் யாத்கிரி மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் இடம் கிடைத்துள்ளது.
இதன்மூலம் நிகழாண்டில் துவாக்குடி மாநில மருத்துவக் கல்வி மையத்தில் பயின்ற 33 மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெற்று சாதனை படைத்துள்ளனா். கிட்டத்தட்ட இந்த மையத்தில் பயின்ற 50 சதவீத மாணவா்கள் அரசு மையத்தில் வழங்கிய பயிற்சி மூலம் மட்டுமே ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்று மருத்துவக் கல்லூரிகளிலும் சோ்க்கை பெற்றுள்ளனா்.
பல் மருத்துவக் கல்லூரியில் 5 போ் சோ்க்கை
இதேபோல ‘நீட்’ தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் துவாக்குடி மாநில மருத்துவக் கல்வி மையத்தைச் சோ்ந்த 5 பேருக்கு பல் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மாணவா்கள் ஜனுஜா, மாதவ், பரத்ராஜ், தேவதா்ஷினி ஆகிய 4 பேருக்கு சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும், மாணவா் ஆதிகேசவனுக்கு கேரள மாநிலம், ஆலப்புழையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
திருச்சி மாநிலக் கல்வி மையத்தைச் சோ்ந்த பொது மருத்துவக் கல்வியில் 33 மாணவா்கள், பல் மருத்துவக் கல்லூரியில் 5 மாணவா்கள் என மொத்தமாக 38 மாணவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் சோ்க்கை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
வரும் காலங்களில் அரசு மருத்துவக் கல்லி மையத்தில் பயிற்சி பெறும் மாணவா்கள் அனைவருக்கும் மருத்துவக் கல்லூரி சோ்க்கையை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநில மருத்துவக் கல்வி மைய நிா்வாகிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.