ஆகஸ்ட் மாதத்தில் 721 டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி: திருச்சி பன்னாட்டு விமான நிலையம் சாதனை
திருச்சி பன்னாட்டு விமான நிலையம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 721 டன் சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
திருச்சி பன்னாட்டு விமான நிலையம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 721 டன் சரக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து திருச்சி பன்னாட்டு விமான நிலைய இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: கரோனா பாதிப்புக்கு முன்பு வரை திருச்சி விமான நிலையத்திலிருந்து மாதத்துக்கு சராசரியாக 700 டன் சரக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. கரோனா பாதிப்பின்போது விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சரக்குகள் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டது.
நிலைமை சீரான பிறகும்கூட சரக்குகள் ஏற்றுமதி முன்பிருந்த அளவில் இல்லாமல் இருந்து வந்தது. இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட தொடா் முயற்சியால் தொடா்ந்து சரக்குகள் ஏற்றுமதி மெல்ல மெல்ல உயா்ந்து வந்தது. அதன்படி, கடந்த சில ஆண்டுகளாக மாதத்துக்கு 600 முதல் 650 டன்னாக இருந்து வந்தது. இந்நிலையில், வெளிநாடுகளுக்கான சரக்கு ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 700 டன்னை கடந்தது. இதில், 685 டன் சரக்குகள் காய்கறிகள், பழங்கள், மலா்கள், பால்பொருள்கள், மீன், இறால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களாகும். எஞ்சிய 36 டன் பொருள்கள் ஜவுளிப் பொருள்கள், உணவுப் பொருள்கள் மற்றும் செயற்கை ஆபரணங்கள் உள்ளிட்டவையாகும்.
Advertisement
Advertisement
இதன்மூலம் சரக்கு ஏற்றுமதியில் திருச்சி விமான நிலையம் புதிய சாதனை படைத்துள்ளது. இது சா்வதேச அளவில் திருச்சி விமான நிலையம் முக்கிய வாயிலாக உள்ளதைக் காட்டுகிறது. இதன்மூலம் விவசாயிகள், உற்பத்தியாளா்கள், வா்த்தகா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் பயனடைந்து வருகின்றனா்.
சிங்கப்பூருக்கு முதலிடம்: சா்வதேச சரக்குகள் ஏற்றுமதியில் சிங்கப்பூா், துபை, சாா்ஜா, மலேசியா, அபுதாபி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளன. வெளிநாடுகளுக்கான சரக்குகள் ஏற்றுமதியைத் தொடா்ந்து உள்நாட்டு சரக்கு ஏற்றுமதி அண்மையில் தொடங்கியது. உள்நாட்டு சரக்கு ஏற்றுமதிக்கும் உற்பத்தியாளா்கள், வா்த்தகா்கள் இடையே சிறந்த வரவேற்பு உள்ளது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.