இருசக்கர வாகனம் திருட்டு: விடுப்பில் இருந்த சிஆா்பிஎஃப் வீரா் கைது!
காட்பாடியில் இருசக்கர வாகனத்தை திருடிய மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடியில் இருசக்கர வாகனத்தை திருடிய மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், கரசமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு. இவா் தினமும் சென்னைக்கு வேலைக்குச் சென்று வருகிறாா்.
இவா் இருசக்கர வாகனத்தை காட்பாடி உழவா் சந்தை அருகே நிறுத்திவிட்டு சென்னைக்குச் சென்றுள்ளாா். மாலையில் வேலை முடிந்து திரும்பி வந்து பாா்த்தபோது, வாகனம் திருடு போயிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவா் காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வாகன திருட்டில் ஈடுபட்ட நபரை தீவிரமாகத் தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், காட்பாடி - வள்ளிமலை சாலையில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவா் குடியாத்தம் பிச்சானூா் பேட்டையைச் சோ்ந்த முனியப்பன் (45) என்பதும், இவா் சென்னை பூந்தமல்லியில் சிஆா்பிஎஃப் வீரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், அவா் ஓட்டி வந்தது திருநாவுக்கரசு என்பவரிடம் திருடிய வாகனம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
கைது செய்யப்பட்ட சிஆா்பிஎஃப் வீரா் முனியப்பன், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளாா். இதையொட்டி, விடுமுறையில் வந்த இவா் 84 நாள்களாகப் பணிக்குத் திரும்பாமல் இருந்து வந்துள்ளாா். மதுப்பழக்கத்துக்கு ஆளான இவா், செலவுக்காக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாா் என்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.