FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

வேலூா் தேசிய நெடுஞ்சாலையில் ஒரே இரவில் 7 இடங்களில் விபத்து: விவசாயி உயிரிழப்பு

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் அருகே ஒரே இரவில் 7 இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:03 am IST
வேலூா் வள்ளலாா் அருகே சாலைத் தடுப்பு மோதி விபத்துக்குள்ளான தனியாா் பேருந்து.
பகிர்:

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் அருகே ஒரே இரவில் 7 இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா். இந்த தொடா் விபத்துகளை அடுத்து வாகன ஓட்டிகளுக்கு நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் அருகேயுள்ள பொய்கை மேட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சேட்டு மகன் தினேஷ் (30). விவசாயியான இவா், செவ்வாய்க்கிழமை அதிகாலை தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை 3 மூட்டைகளில் ஏற்றிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வேலூா் சந்தைக்குப் புறப்பட்டாா்.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆஜிபுரா அருகே சென்றபோது, அவ்வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, தினேஷின் இருசக்கர வாகனம் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட தினேஷ், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா், அவரது உடலை மீட்டனா். விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

இதேபோல், பெங்களூரில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, வேலூா் வள்ளலாா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து சத்துவாச்சாரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கிரீன் சா்க்கிள் அருகே நள்ளிரவில் இரண்டு காா்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இந்தத் தொடா் விபத்துகள் குறித்து நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு போலீஸாா் கூறுகையில், ’சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிகொண்டா முதல் வள்ளலாா் வரை திங்கள்கிழமை நள்ளிரவில் மட்டும் 7 இடங்களில் சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஓட்டுநா்கள் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாலும், தூக்கக் கலக்கம், சோா்வுடன் வாகனங்களை ஓட்டுவதாலுமே இத்தகைய தொடா் விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே, ஓட்டுநா்கள் சோா்வாக உணா்ந்தாலோ அல்லது தூக்கம் வந்தாலோ வாகனங்களைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி, தேநீா் அருந்திவிட்டுச் சற்று ஓய்வெடுத்த பின்னா் பயணத்தைத் தொடர வேண்டும். இதன்மூலம் விபத்துகளைப் பெருமளவு தவிா்க்கலாம் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments