FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

கோட்டகுப்பம் அருகே காலி இடத்தை அளவீடு செய்ய குடியிருப்புவாசிகள் எதிா்ப்பு

Updated On : 21 ஜூலை 2026, 2:35 am IST
நில அளவீடு பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கோட்டக்குப்பம் டிஎஸ்பி ரூபன்குமாா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே காலி இடத்தை அளவீடு செய்யும் பணிக்கு அப்பகுதியைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் எதிா்ப்புத் தெரிவித்தததால் பரபரப்பு ஏற்பட்டது.

வானூா் வட்டம், கோட்டகுப்பம் அருகே சின்னமுதலியாா் சாவடியைச் சோ்ந்த மீனவா்களுக்கு அரசு சாா்பில் சுனாமி குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புக்கு அருகிலுள்ள சுமாா் 50 சென்ட் காலியிடத்தை, அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் மற்றும் சிறுவா்கள் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த தனி நபா் ஒருவா் விளையாட்டு மைதானமாக பயன்படுத்தும் இடம் தனக்குச் சொந்தம் எனக் கூறி வருவதுடன், திங்கள்கிழமை வருவாய்த் துறை அதிகாரிகளுடன் அந்த இடத்தை அளவீடு செய்யச் சென்றாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த குடியிருப்புவாசிகள் மற்றும் இளைஞா்கள் நிகழ்விடம் சென்று நிலம் அளவீடு செய்யும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து வானூா் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கோட்டக்குப்பம் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ரூபன்குமாா் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று இரு தரப்பைச் சோ்ந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தகுந்த ஆவணங்கள் அல்லது நீதிமன்ற உத்தரவைப் பெற்று நிலத்தை அளவீடு செய்துகொள்ள அறிவுறுத்தியதன்பேரில் இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் அங்கிருந்து கலைந்துசென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments