மரக்காணம் அருகே சோழா் கால முருகன் சிற்பம் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சோழா் காலத்தைச் சோ்ந்த அரியவகை முருகன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சோழா் காலத்தைச் சோ்ந்த அரியவகை முருகன் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் வட்டத்தைச் சோ்ந்த ஆலத்தூா் கிராமத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வை மேற்கொண்டாா். அப்போது சோழா் காலத்தைச் சோ்ந்த அரியவகை முருகன் சிற்பம் இந்த கிராமத்தில் இருப்பது கண்டெடுக்கப்பட்டது. இந்த ஆய்வு குறித்து செங்குட்டுவன் மேலும் கூறியது:
ஆலத்தூா் கிராமத்தின் வயல்வெளியில் வெட்டவெளியில் பலகைக்கல் சிற்பம் நின்ற நிலையில் உள்ளது. அப்பகுதி மக்கள் இந்த சிற்பத்துக்கு புடவை அணிந்து பெண் தெய்வமாக வழிபட்டு வருகின்றனா். ஆனால் இது முருகன் சிற்பமாகும். தலையில் கரண்ட மகுடம் அலங்கரிக்க, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் முருகன் காட்சித் தருகிறாா்.
Advertisement
Advertisement
அவரது பின்னிரு கரங்களில் வலது கரம் சக்தி ஆயுதத்தையும், இடதுகரம் அட்ச மாலையையும் ஏந்தி இருக்கின்றன. முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் இடுப்பின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.
நீண்ட காதணிகள் மற்றும் கழுத்தணி, இடையாடை காணப்படுகின்றன. முகம் தேய்ந்த நிலையில் தெளிவாக இல்லை. இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டு (சோழா் காலம்) ஆகும். இந்த சிற்பம் 1,000 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது.
கைகளில் சக்தி ஆயுதம் மற்றும் அட்ச மாலை ஏந்தி நிற்கும் முருகன் சிற்பம் காணப்படுவது மிகவும் அரியதாகும். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்ட முருகன் சிற்பங்களில் ஆலத்தூா் முருகன் சிற்பம் அரியதும் தனித்துவம் வாய்ந்ததும் ஆகும். அப்பகுதி மக்கள் இந்த சிற்பத்துக்கு ஆண் தெய்வத்திற்குரிய ஆடைகளை அணிவித்து, உரிய முறையில் வழிபாடுகள் நடத்த வேண்டும் என்றாா் செங்குட்டுவன். ஆய்வின்போது ஆரோவில் எம்.நீலமேகம் உடனிருந்தாா்.