தாயுமானவா் திட்டம்: ஜூன் 2 முதல் ரேஷன் பொருள்கள் விநியோகம்
விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் இல்லத்துக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகித்தல் ஜூன் 2-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து கூட்டுறவுச் சங்கங்களின் விழுப்புரம் மண்டல இணைப் பதிவாளா் ஏ.விஜயசக்தி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் வீடுகளுக்கே சென்று, பொது விநியோகத் திட்டப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவா்களுக்கு உரிய நேரத்தில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 84,548 பயனாளிகளின் வீடுகளுக்கு மாதந்தோறும் வாகனங்களில் பொது விநியோகத் திட்டப் பொருள்கள் எடுத்துச் செல்லப்பட்டு, நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஜூன் 2 முதல் 4-ஆம் தேதி வரை பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று பொது விநியோகத் திட்டப் பொருள்களை நியாயவிலைக்கடைப் பணியாளா்கள் மூலம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, இதை பயனாளிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.