கடலூர் துறைமுகத்தில் தூண்டில் வளைவு திட்டத்தை விரைந்து முடிக்க வலியுறுத்தல்
கடலூர் துறைமுகத்தில் தூண்டில் வளைவு திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென மீனவர் கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூர் துறைமுகத்தில் தூண்டில் வளைவு திட்டப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டுமென மீனவர் கிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
கடலூர் துறைமுகத்தில் மணல் தூர்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டன. கடந்த ஐந்தாண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் துறைமுகத்தில் ராட்சத அலைகளில் சிக்கியும், படகு கவிழ்ந்தும் உயிரிழந்தனர். எனவே, துறைமுகத்தை விரிவாக்கம் செய்து, தூண்டில் வளைவு அமைக்க வேண்டும், கடல் அரிப்பினைத் தடுக்கும் வகையில் கடற்கரையோரங்களில் கருங்கற்கள் கொட்ட வேண்டும் என மீனவ கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர்.
கடந்த தேர்தலின் போது அதிமுக இந்தத் துறைமுகத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்துதல், தூண்டில் வளைவு அமைத்தல், துறைமுக விரிவாக்கம் ஆகிய பணிகளை வாக்குறுதிகளாக அறிவித்திருந்தது. எனினும், இப்பணிகள் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் கடந்த பிப்.7ஆம் தேதி தூண்டில் வளைவு திட்டத்துக்கான அடிக்கல்லை அமைச்சர் எம்.சி.சம்பத் நாட்டினார். ரூ.10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் மூலம் 6 மாதங்களில் இத்திட்டம் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடலூர் மாவட்ட மீனவர் கிராம நிர்வாகிகள் தேவனாம்பட்டினம் கிராம நிர்வாகி குப்புராஜ் தலைமையில் துறைமுகத்தில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து திட்டப் பணிகள் நடைபெறும் பகுதியைப் பார்வையிட்டனர். பின்னர், நிர்வாகிகள் கூறியது: தூண்டில் வளைவுத் திட்டம் கடலூர் மாவட்ட மீனவர்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இத்திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய தரத்துடன் முடிக்கப்பட வேண்டும். அப்போது தான் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். மேலும், துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும். அக்கரைகோரி தொடங்கி சோனாங்குப்பம் வரை கிழக்கு பகுதியிலும் துறைமுக தளம் அமைத்துத் தர வேண்டும். தூண்டில் வளைவுத் திட்டத்தை தொடர்ந்து கண்காணிப்போம். இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் மெத்தனம் காட்டப்பட்டால் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.