FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

வெள்ளத்தால் 930 ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் 930 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

Updated On : 20 ஆகஸ்ட் 2018, 10:02 am IST
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் 930 ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
காவிரி ஆற்றில் அதிகப்படியான வெள்ளம் வந்ததைத் தொடர்ந்து கொள்ளிடம் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால், கடலூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதிகளில் வெள்ள நீ கிராமங்களில் புகுந்துள்ளது. இந்தப் பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பாக தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது 2.47 லட்சம் கன அடி தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. 3 லட்சம் முதல் 4 லட்சம் கனஅடி வரை தண்ணீர் சென்றாலும் பாதுகாப்பான நிலையிலேயே மாவட்டம் இருக்கும். 
 எனினும், தற்போது வெள்ளம் புகுந்த 21 கிராமங்களில் 4 முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,500 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுக்கள் மூலமாக உணவு தயாரிக்கப்பட்டு சூடாக வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 3 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் 15 முதல் 20 முதலைகள் வரை அடித்து வரப்பட்டுள்ளன. இந்த முதலைகளை பிடித்திட அதில் அனுபவம் வாய்ந்த நந்திமங்கலம் கிராமத்தினர், காவல் துறை, தீயணைப்புத் துறையினர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பிடிப்பட்ட முதலைகள் நெய்வேலியில் விடப்படும்.
 மாவட்டத்தில் இதுவரை சுமார் 930 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், கால்நடைகளும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. பாதிப்புகளை கண்டறிய கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது. இதுதொடர்பாக முதல்வரின் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்து நிவாரணம் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடும் எனக் கண்டறியப்பட்ட பகுதிகள் 7 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு தலா ஒரு சார்- ஆட்சியர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகள், கோழிகளுக்கு தீவனம் வழங்கிட கால்நடைத் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருவதால் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டாமென சில விவசாய அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. எனினும், விவசாய சங்கங்கள், மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.
 கொள்ளிடம் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வரத்து இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
  அப்போது, கடலூர் நகராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஜி.ஜெ.குமார், முன்னாள் கவுன்சிலர்கள் வ.கந்தன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments