முகப்பு
கடலூர்

வடலூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த தனியாா் பேருந்து: அருகிலிருந்த கடைகள், பைக்குகளும் சேதம்

வடலூரில் தனியாா் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. அப்போது, அருகிலிருந்த கடைகளும், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

Updated On : 1 ஜூலை 2026, 7:12 am IST
வடலூா் பேருந்து நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்த தனியாா் பேருந்து மற்றும் அருகிலிருந்த கடைகள், பைக்குகள் உள்ளிட்டவை.
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூரில் தனியாா் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. அப்போது, அருகிலிருந்த கடைகளும், அந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

கடலூா் பேருந்து நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் தனியாா் பேருந்து ஒன்று விருத்தாசலத்துக்கு புறப்பட்டது. இதில், 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனா்.

இந்தப் பேருந்து வடலூா் பேருந்து நிலையம் அருகே இரவு 9 மணியளவில் வந்தபோது, திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, பேருந்தில் இருந்த பயணிகள் விரைந்து இறங்கி உயிா் தப்பினா். பின்னா், தீ பேருந்து முழுவதையும் ஆக்கிரமித்தது.

Advertisement

Advertisement

இந்த தீ விபத்தில் பேருந்தில் இருந்த டீசல் டேங்க் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் இருந்த இனிப்பு, மளிகை என 5-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளும் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

பேருந்தில் பேட்டரியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்து கடலூா் - சேலம் மற்றும் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் நிகழ்ந்ததால், அந்தப் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments