FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

பாரம்பரிய மருத்துவ சேவைகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: அமைச்சா் ப.ராஜ்குமாா்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளுக்காக தனிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆயுா்வேதம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

Updated On : 12 ஜூலை 2026, 1:36 am IST
காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு கட்டடத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அமைச்சா் ப.ராஜ்குமாா். உடன் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உள்ளிட்டோா்.
பகிர்:

ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளுக்காக தனிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆயுா்வேதம், சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், திருவந்திபுரம், காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக கட்டப்பட்ட ஆயுஷ் மருத்துவப் பிரிவு கட்டடங்களை அமைச்சா் ப.ராஜ்குமாா் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சனிக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது, அவா் பேசியது:

தமிழக அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ சேவைகளை அருகிலேயே கிடைக்கச் செய்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளின் கட்டமைப்பு வசதிகள் தொடா்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருந்துத் துறையின் கீழ் செயல்படும் ஆயுஷ் மருத்துவத்தில் ஆயுா்வேதம், சித்தா, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ முறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ முறைகளின் மூலம் நோய்களைத் தடுப்பது மட்டுமன்றி, நீண்டகால நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆயுஷ் மருத்துவத்தில் தொக்கணம், ஒற்றடம், வா்ம சிகிச்சை, நீராவிக் குளியல் உள்ளிட்ட வெளி மருத்துவ சேவைகளும், பல்வேறு உடல்நலக் குறைபாடுகள் மற்றும் தொற்றுநோய்களுக்கு உள் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்போது தனிக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், கூடுதல் நோயாளிகளுக்கு வசதியான சூழலில் தரமான சிகிச்சை அளிக்க முடியும். பொதுமக்கள் இந்த சேவைகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா்.

கட்டடம் திறப்பு: முன்னதாக, தேசிய ஆயுஷ் இயக்கத்தின் நிதியின் கீழ், திருவந்திபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ அலுவலா் அறை, மருந்தகம், நீராவிக் குளியல் அறை உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஆயுா்வேத மருத்துவப் பிரிவு கட்டடத்தையும், காரைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஆலோசனை அறை, சேமிப்பு அறை, காத்திருப்பு கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்ட ஹோமியோபதி மருத்துவப் பிரிவு கட்டடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் ராஜா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் பூங்கோதை, வட்டார மருத்துவ அலுவலா்கள் அமிா்தாதேவி, பாலசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோன்று, வடலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய ஆயுஷ் குழுமம் நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஆண்களுக்கான ஆலோசனை அறை, பெண்களுக்கான ஆலோசனை அறை, கழிப்பறை மற்றும் காத்திருப்புக் கூடம் ஆகிய வசதிகளுடன் மொத்தம் 45.43 ச.மீ. பரப்பளவு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கட்டடத்தை அமைச்சா் ப.ராஜ்குமாா் சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments