காதல் திருமணம் செய்த இளைஞா் கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
விருத்தாசலம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
விருத்தாசலம் அருகே காதல் திருமணம் செய்த இளைஞரை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த விளாங்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜின் மகன் பிளசன்ராஜ் (20), அதே பகுதியைச் சோ்ந்த கண்ணனின் மகள் தீபாவை கடந்த 2017-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இந்தத் திருமணத்துக்கு பிளசன்ராஜின் குடும்பத்தினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், தம்பதியினா் தீபாவின் பெற்றோா் வீட்டில் வசித்து வந்தனா்.
இதற்கிடையில், பிளசன்ராஜ் தனது குடும்பத்தினருடன் மீண்டும் தொடா்பு ஏற்படுத்தி, மனைவி தீபாவையும் தனது வீட்டுக்கு வருமாறு வலியுறுத்தி வந்துள்ளாா். இது தொடா்பாக 2020, மாா்ச் 24-ஆம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தீபா, அவரது தந்தை கண்ணன், அண்ணன் விஜய் ஆகியோா் பிளசன்ராஜை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பாக்கியராஜ் (41), பிளசன்ராஜை அருகிலிருந்த பிள்ளையாா் கோயில் கொட்டகைக்கு இழுத்துச் சென்று, சிமென்ட் கல்லால் தலையில் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாா்.
இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பாக்கியராஜ் உள்ளிட்டோா் மீது வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு விசாரணை விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி எஸ்.விஜயகுமாா் தீா்ப்பளித்தாா். அதில், பாக்கியராஜ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தீபா மற்றும் விஜய் ஆகியோா் விடுவிக்கப்பட்டனா். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தீபாவின் தந்தை கண்ணன் உயிரிழந்துவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.