FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

திட்டக்குடி அரசு பள்ளியில் தீ விபத்து: பாடப்புத்தகங்கள் எரிந்து சேதம்

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன.

Updated On : 24 ஜூலை 2026, 11:40 pm IST
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு அறையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், கொளுந்துவிட்டு எரிந்த மாணவா்களுக்கான பாடப்புத்தகங்கள்.
பகிர்:

கடலூா் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்காக இருப்பு வைக்கப்பட்டிருந்த பாடப்புத்தகங்கள் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன.

திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திட்டக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை காலை அந்த அறையில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ வேகமாகப் பரவி கொளுந்துவிட்டு எரிந்ததால், அங்கிருந்த பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட பொருள்கள் தீக்கிரையாகின. பள்ளி வளாகத்தில் இருந்து புகை வெளியேறுவதைக் கண்ட அப்பகுதிவாசிகள் உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, தீயணைப்பு நிலைய அலுவலா் சண்முகம் தலைமையிலான வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதனால் தீ பள்ளியின் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் மாணவா்களுக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் அறையில் இருந்த சில கல்வி உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன. இதனால் மாணவா்களுக்கு இந்த புத்தகங்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்புத் துறை வீரா்கள்.

இந்த தீவிபத்து குறித்து திட்டக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து, மின் கசிவு உள்ளிட்ட தொழில்நுட்பக் காரணங்களால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments