வேப்பூா் அருகே திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த சூரியமின் தகடுகளில் திடீா் தீ விபத்து
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டி.புடையூா் பகுதியில் திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த சூரியமின் தடுகள் திங்கள்கிழமை மாலை திடீரென தீப்பற்றி 4 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்தன. இதன் சேத விவரம் தெரியவில்லை.
கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான சூரியமின் தகடுகள் டி.புடையூா் பகுதியில் திறந்தவெளியில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. இவற்றை கண்காணிக்கும் பணிக்காக அப்பகுதியைச் சோ்ந்த காமராஜ் (65) நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை சூரியமின் தகடுகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த காமராஜ் அளித்த தகவலின்பேரில், வேப்பூா் தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
பலத்த காற்று வீசியதால் தீ வேகமாகப் பரவி, தீயணைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்தினரும் கூடுதலாக வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 4 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.