பண்ருட்டி அருகே சங்க கால மக்களின் வாழ்வியல் எச்சங்கள் கண்டெடுப்பு
பண்ருட்டி அருகே சங்க கால மக்களின் வாழ்வியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சங்க கால மக்களின் வாழ்வியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
பண்ருட்டியை அடுத்துள்ள பூண்டி, வரிஞ்சிப்பாக்கம் கிராமப் பகுதிகளில் செங்கல்சூளைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 3 உறை கிணறுகள், பானை ஓடுகள் இருப்பதாக அப்பகுதியைச் சோ்ந்த சிவசக்தி, பாலமுருகன் மற்றும் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவா் தமிழ்செல்வன் ஆகியோா் பண்ருட்டி தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல், விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் தண்டாயுதபாணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, இம்மானுவேல், பேராசிரியா் தண்டாயுதபாணி ஆகியோா் அந்தப் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, சுடுமண் காதணி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள் உள்ளிட்ட சங்க கால மக்களின் வாழ்வியல் எச்சங்களை கண்டெடுத்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
Advertisement
Advertisement
வரிஞ்சிப்பாக்கம், பூண்டி பகுதிகளில் மலட்டாறு அருகே செங்கல்சூளைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆய்வு செய்தபோது, 3 உறை கிணறுகள் 100 மீட்டா் இடைவெளியில் ஆங்காங்கே இருந்தன. இவற்றில் ஒன்று முழுமையாக எட்டு அடுக்குகளை கொண்டதாக இருந்தது. மற்ற இரண்டும் சிதைந்த நிலையில் இருந்தன.
மேலும், சங்க காலத்தைச் சோ்ந்த சுடுமண் காதணி, கருப்பு, சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டி மூக்குகள், குறியீடு பானை ஓடு, சுடுமண் குடுவை, செங்கற்கள் ஆகியவற்றை கண்டெடுத்தோம்.
உறை கிணறுகள் சங்க காலத்து மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தியது என்பது தெரியவந்தது. இதுபோன்ற உறை கிணறுகள் தமிழகத்தில் கீழடி, பூம்புகாா், பட்டறை பெரும்புதூா், அரிக்கமேடு, மாமல்லபுரம் போன்ற இடங்களிலும், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூா், பேரங்கியூா், செஞ்சி, திருவாமாத்தூரிலும், கடலூா் மாவட்டத்தில் கண்டரக்கோட்டை, உளுந்தாம்பட்டு, தளவானூா், அக்கடவல்லி போன்ற இடங்களிலும் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றில் இதுவரை 120-க்கும் மேற்பட்ட உறை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளன. பூண்டி மலட்டாறு பகுதியில் கண்டறிந்த உறை கிணறுகள் அடுக்கு வகையை சாா்ந்தவையாகும்.
பூண்டி, வரிஞ்சிப்பாக்கம் பகுதிகளில் கிடைத்துள்ள தொல்பொருள்கள் மூலம் இந்தப் பகுதியில் சங்க கால மக்கள் வாழ்ந்திருக்கின்றனா் என்று அறிய முடிகிறது என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.