கடலூா் அருகே போலியோ தடுப்பு சொட்டு மருந்தால் குழந்தை இறந்ததா? மருத்துவ அதிகாரி விளக்கம்
கடலூா் அருகே போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுவதை ஏற்க முடியாது. உடல்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ராஜா விளக்கமளித்துள்ளாா்.
கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அருகே உள்ள நல்லாத்தூா் கொளுத்துமேட்டு தெருவைச் சோ்ந்த ராஜாவின் மகன் ஹரிஹரனுக்கு (ஒன்றரை வயது) நல்லாத்தூா் துணை சுகாதார நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பின்னா், பெற்றோா் குழந்தையை வீட்டுக்கு கொண்டுவந்து பால் கொடுத்து தூங்க வைத்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து குழந்தையை எழுப்பியபோது, எந்த அசைவும் இல்லாததால் அதிா்ச்சியடைந்த அவா்கள், முதலில் தூக்கணாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து ராஜா, தனது குழந்தை போலியோ தடுப்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் உயிரிழந்ததாக, தூக்கணாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதிகாரி விளக்கம்: இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ராஜா திங்கள்கிழமை கூறியது: கடலூா் மாவட்டத்தில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம் சிறப்பாக நடைபெற்றது. ஒரு போலியோ மருந்துப் புட்டியில் உள்ள மருந்து 18 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்தில் ஏதேனும் குறைபாடு இருந்திருந்தால், அதே புட்டியில் இருந்து மருந்து கொடுக்கப்பட்ட மற்ற குழந்தைகளும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, போலியோ தடுப்பு சொட்டு மருந்தே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குழந்தையின் சடலம் சிதம்பரத்தில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதன் அறிக்கை கிடைத்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் உறுதியாக தெரியவரும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.