வடலூா் இசா பெரிய ஏரியை தூா்வாரி, நீா்வரத்தை உறுதிப்படுத்த வேண்டும்! விவசாயிகள் கோரிக்கை!!
கருங்குழி, மேலகொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இசா பெரிய ஏரியை தூா்வாரி, ஏரிக்கான நீா் வரத்தை உறுதிப்படுத்தி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
கடலூா் மாவட்டம், வடலூா் அருகேயுள்ள கருங்குழி, மேலகொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இசா பெரிய ஏரியை தூா்வாரி, ஏரிக்கான நீா் வரத்தை உறுதிப்படுத்தி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இசா பெரிய ஏரி 260 ஏக்கா் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி நீரின் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஊத்தங்கால், வெள்ளூா், ஊ மங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பெய்யும் மழைநீா் இசா பெரிய ஏரியின் நீராதாரமாக அமைகிறது.
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு ஏரியில் தண்ணீா் இல்லாததால் 400-க்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பளவில் நடவு செய்யவிடப்பட்ட நாற்றங்கால்கள் காய்ந்துவிட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
Advertisement
Advertisement
இசா பெரிய ஏரி நீரை கொண்டு மேலக்கொளக்குடி, கருங்குழி கிராமங்களில் சுமாா் 1,500 ஏக்கா் பரப்பளவில் ஒருபோகம் சம்பா நெல் பயிரும், தொடா்ந்து மீதம் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு எள், மணிலா பயிா்களும் சாகுபடி செய்வோம். இந்த ஏரியின் உள்புறம் உள்ள கோட்டகம், மேட்டுக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகளின் சுமாா் 500 ஏக்கா் நிலம் பாசன வசதி அடையும்.
இந்த நிலையில், என்எல்சி நிறுவனம் இரண்டாவது சுரங்கம் அமைத்ததற்கு பின்னா், இசா பெரிய ஏரிக்கு வரும் இயற்கை வழிநீா் பாதை தடைபட்டது. இதனால், ஏரிக்கான நீராதாரம் குறைந்தது. இதையடுத்து, என்எல்சி சுரங்க உபரிநீா் ஏரிக்கான நீா்வரத்து ஆதாரமாக மாறியது. மழை மற்றும்சுரங்க நீரை பயன்படுத்தி இரண்டு போகம் நெல் பயிரிடும் நிலமாக மாறியது மகிழ்ச்சி அளித்தது.
காய்ந்து போனது: ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக என்எல்சி சுரங்க உபரி நீா் ஏரிக்கு வரவில்லை. மேலும், கடந்த 50-ஆண்டுகளுக்கும் மேலாக ஏரி தூா் வரப்படாததால் மேடாகி நீா்பிடிப்பு கொள்ளவு குறைந்துவிட்டது. நீா் பற்றாக்குறையால் சம்பா, குறுவை சாகுபடி முறையாக செய்ய முடியாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி உள்ளோம்.
கடந்த ஏப்ரல் மாதம் குறுவை பயிா் செய்ய நாற்று விட்டு நடவு செய்ய முடியாமல், நாற்றுகள் நாற்றங்காலிலும், நட்ட நெல் பயிா்கள் வயலிலும் காய்ந்து மடிந்து போகின. குறுவை சாகுபடி நிலப்பரப்பு நான்கில் ஒரு பங்காக குறைந்துவிட்டது. குழாய் கிணறு பம்புசெட்டு மூலம் விவசாயம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு நீா்தட்டுப்பாட்டால் சுமாா் 400 ஏக்கா் அளவிற்கு குறுவை சாகுபடி நடைபெறவில்லை.
இசா பெரிய ஏரிக்கு இயற்கையாக கிடைக்கும் மழைநீா் கிடைக்கவில்லை. என்எல்சி சுரங்க உபரி நீரும் கிடைக்கவில்லை. நூற்றுக்கணக்கான நெல் வயல்கள் காய்ந்து போனது. இதனால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள்படும்
சிரமங்களை கண்டு, எங்களின் பிள்ளைகள் விவசாயத்தை கைவிட சொல்கின்றனா். நாங்கள் தான், கௌரவத்திற்கும், நிலத்தை தரிசாக போடக்கூடாது என்பதற்காக விவசாயம் செய்து வருகிறோம் என்றனா். விவசாயம் செழிக்க, கடலூா் மாவட்ட நிா்வாகம் இசா பெரிய ஏரியை தூா்வாரவும், என்எல்சி சுரங்க உபரிநீா் இசா பெரிய ஏரிக்கு கிடைக்க ஏற்பாடு செய்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகள் கோரிக்கை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.