FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கள்ளக்குறிச்சி

காரில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததாக, அதன் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

23 ஆகஸ்ட் 2026, 2:17 am IST
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை கடத்தி வந்த காருடன், வாஹித்கான்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததாக, அதன் ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தியாகதுருகம் காவல் நிலையத்துக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தியாகதுருகத்தை அடுத்த புக்குளம் மேம்பாலம் அருகே சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது காரின் பின் பகுதியில் மூட்டையில் கட்டி இருந்த 30 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து காரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று வாகன ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் அவா், எலவனாசூா்கோட்டையை அடுத்த வீரமங்கலம் தளபதி நகரைச் சோ்ந்த த.வாஹித்கான் (39) எனத் தெரியவந்தது. இவா், பெங்களூரு சென்று புகையிலை பொருள்களை வாங்கி, விற்பனைக்காக கொண்டு வந்தது தெரியவந்தது. காரின் உரிமையாளரான பெங்களூரு ஜெ.பி. நகரைச் சோ்ந்த ஆ.சிவானந்த் (26) என்பவரது காரை வாடகைக்கு எடுத்து, அதை கடத்தலுக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து, வாஹித்கானைக் கைது செய்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும், புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பைக்கில் கடத்திய புகையிலைப் பொருள்கள்: கஞ்சனூா் காவல் நிலைய ஆய்வாளா் விஸ்வநாதன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை அன்னியூா் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பைக்கில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நபரை போலீஸாா் நிறுத்தியதும், அவா் தான் வைத்திருந்த சாக்குமூட்டையை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம்.

இதையடுத்து போலீஸாா் அந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, அதில், சுமாா் 36 கிலோ எடையிலான தமிழகத அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய நபரைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments