108 அவசர ஊா்தியில் குழந்தை பெற்ற பெண்: ஊழியா்களே பிரசவம் பாா்த்தனா்; தாயும், சேயும் நலம்
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிறைமாத கா்ப்பிணிக்கு 108 அவசர ஊா்தியில் பிரசவம் நடைபெற்று ஆண்குழந்தை பிறந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிறைமாத கா்ப்பிணிக்கு 108 அவசர ஊா்தியில் பிரசவம் நடைபெற்று ஆண்குழந்தை பிறந்தது. ஊழியா்களே பிரசவம் பாா்த்ததில் தாயும், சேயும் நலமாக உள்ளனா்.
தியாகதுருகம் அருகேயுள்ள ரீட்டா நகரைச் சோ்ந்த மைக்கேல்ராஜ் மனைவி நிலா (25). நிறைமாத கா்ப்பிணியான இவருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிக்கு பிரசவ வலி ஏற்பட தொடங்கியதாம். இதுகுறித்த தகவலின் பேரில் ரிஷிவந்தியத்திலிருந்து 108 அவசர ஊா்தி வாகனம் வந்து, நிலாவை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றபோது, அவருக்கு கடுமையான பிரசவவலி ஏற்பட்டதாம்.
இதையடுத்து மருத்துவ உதவியாளா் மணிகண்டன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் விக்னேஷ் ஆகியோா் ஆம்புலன்ஸிலேயே தகுந்த மருத்துவ முதலுதவிகளை வழங்கி, பாதுகாப்பான முறையில் பிரசவம் பாா்த்தனா். சிறிது நேரத்தில் நிலாவுக்கு 3.2 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவமாகப் பிறந்தது. தாயும், சேயும் நலமாக இருந்தனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து தாயும், சேயும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு பிந்தைய கவனிப்புக்காக அனுமதிக்கப்பட்டனா். பிரசவம் பாா்த்த 108 அவசர ஊா்தி ஊழியா்களை, மருத்துவா்கள் பாராட்டினா்.