புதுவை அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை இரு மடங்கு குறைந்துவிட்டது: அதிமுக குற்றச்சாட்டு
புதுவையில் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதால், கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை இரண்டு மடங்கு குறைந்துவிட்டதாக அதிமுக குற்றச்சாட்டியது
புதுவையில் அரசுப் பள்ளிகளின் தரம் குறைந்து வருவதால், கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை இரண்டு மடங்கு குறைந்துவிட்டதாக அதிமுக குற்றச்சாட்டியது.
இது குறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவர் ஆ.அன்பழகன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவை நிதிநிலை அறிக்கையில் ரூ.600 கோடிக்கும் மேல் கல்விக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனாலும், கல்வியின் தரம் உயரவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 1.45 லட்சமாக இருந்தது. இது தற்போது 75 ஆயிரமாகக் குறைந்துவிட்டது.
இதற்கு ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாததே முதல் காரணம். மாணவர்களுக்கு செயல்படுத்தி வந்த புத்தகப்பை, சீருடை உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தவில்லை.
அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அந்தப் பள்ளிகள் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றில் பணியாற்றுவோருக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. பல நூறுக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தொடர்பாக துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்தும் பயனில்லை.
வெளிநாட்டில் படித்து வரும் மாணவி சோபியா, பொது இடத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை முன்னிலையில் அந்தக் கட்சியைப் பற்றி தரக்குறைவாக முழக்கம் எழுப்பியது கண்டிக்கத்தக்கதாகும்.
புதுவை முதல்வர் நாராயாணசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் மாணவியின் செயலை நியாயப்படுத்தி பேசுகின்றனர். இதுவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதன் மூலம், அவர்கள் அரசியல் செய்கின்றனர்.
சகிப்புத்தன்மை வேண்டும் எனக் கூறும் முதல்வர் நாராயணசாமி, ஆளுநரின் விமர்சனங்களை எதிர்கொள்ளத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.