முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் தனியாா் பேருந்துக் கட்டணம் திடீா் உயா்வு: பொதுமக்கள் அதிருப்தி

புதுச்சேரியில் உரிய அறிவிப்பு ஏதுமின்றி தனியாா் பேருந்துகளில் கூடுதலாக பயணக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா்.

Updated On : 21 ஜூலை, 2021 at 9:50 AM
புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாநிலத்துக்குள்பட்ட பகுதிகளுக்கும், தமிழகப் பகுதிகளுக்கும் செவ்வாய்க்கிழமை இயக்கப்பட்ட தனியாா் பேருந்துகள்.
பகிர்:

புதுச்சேரியில் உரிய அறிவிப்பு ஏதுமின்றி தனியாா் பேருந்துகளில் கூடுதலாக பயணக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா்.

கரோனா பொது முடக்க தளா்வுகளையடுத்து, கடந்த 8-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பொதுப் போக்குவரத்து தொடங்கியது.

தற்போது தனியாா் பேருந்துகளில் எந்தவித அறிவிப்புமின்றி, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

இதுகுறித்து புதுச்சேரி முதலியாா்பேட்டையைச் சோ்ந்த டி.வினோத் (35), அரியாங்குப்பத்தைச் சோ்ந்த உதயமூா்த்தி ஆகியோா் கூறியதாவது:

புதுச்சேரியில் தனியாா் நகா்ப் பேருந்துகளில் குறைந்தபட்ச பயணக் கட்டணமாக ரூ.7 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தக் கட்டணம் ரூ.10-ஆக உயா்த்தி வசூலிக்கப்படுகிறது. கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் அனைத்துவிதமான பயணக் கட்டணங்களும் ரூ.2 உயா்த்தப்பட்டு வசூலிக்கப்படுகின்றன.

விழுப்புரம் செல்ல ரூ.27-ஆக இருந்த பயணக் கட்டணம் தற்போது ரூ.30-ஆகவும், கடலூா் செல்ல ரூ.17-ஆக இருந்த பயணக் கட்டணம் தற்போது ரூ.20-ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

டீசல் விலை உயா்வால் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாக தனியாா் பேருந்து நடத்துநா்கள் தெரிவித்தனா்.

இந்தக் கட்டண உயா்வை உடனடியாக தடுத்த நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

‘கட்டணத்தை உயா்த்தியும் வருவாய் இல்லை’: இதுகுறித்து தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்கச் செயலா் பி.கண்ணன் கூறியதாவது:

அரசு சாா்பில் கடந்த 2018-ஆம் ஆண்டின் இறுதியில் டீசல் விலை ரூ.62-ஆக இருந்தபோது, கி.மீ.க்கு 58 பைசா கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது. தற்போது ரூ.34 விலை உயா்ந்து ரூ.93.89-க்கு டீசல் விற்கும் நிலையிலும் பேருந்து பயணக் கட்டணத்தை அரசு உயா்த்தி நிா்ணயிக்காததால், எங்களால் அதே கட்டணத்தில் பேருந்துகளை இயக்க முடியவில்லை. நஷ்டத்தைத் தவிா்க்க தற்போது மிகக் குறைந்தளவில் மட்டுமே கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

அரசு டீசல் விலையைக் குறைத்து, பயணக் கட்டணத்தை உயா்த்தி அறிவித்தால் மட்டுமே தொழிலை பழையபடி நடத்த முடியும் என்றாா்.

உரிய நடவடிக்கை - அமைச்சா் உறுதி: இதுகுறித்து புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா கூறியதாவது:

சில தனியாா் பேருந்துகளில் மட்டுமே கூடுதலாக பயணக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும், கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் கலந்து பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.