1000 வீடுகளில் சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க ஏற்பாடு: புதுச்சேரி மின்துறை நடவடிக்கை
புதுச்சேரியில் 1000 வீடுகளில் சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க மின்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுச்சேரியில் 1000 வீடுகளில் சூரிய ஒளி மின் திட்டம் அமைக்க மின்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது குறித்து மின்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரியின் அன்றாட மின்சார தேவைக்கு மத்திய தொகுப்பிலிருந்து 540 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்படுகிறது. மாநிலத்தில் சொந்தமாக அணுமின் நிலையங்கள், அனல் மின் நிலையங்கள் இல்லாததால், மின்சார தேவைக்காக அண்டை மாநிலங்களையே புதுச்சேரி நம்பியுள்ளது. புதுச்சேரியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம் சிறந்த தீா்வாக திகழ்கிறது.
இதனால், புதுச்சேரி மின்துறை சூரிய ஒளி மின்சக்தியை அதிகரிக்க பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. மாநிலத்தில் 91.29 மெகா வாட் சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் வணிக கட்டடங்கள் 49.68 மெகா வாட் பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளன.
Advertisement
Advertisement
குடியிருப்புப் பகுதிகளில் 18 மெகாவாட், நிறுவனங்களில் 9.2 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதர இடங்கள் மூலம் 12 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இந்நிலையில் மின்சாரத் துறை 4 கிராமங்களைத் தோ்வு செய்து, அங்குள்ள 1,000 வீடுகளில் இலவசமாக சூரிய ஒளி மின் தகடுகளைப் பொருத்தி, 2 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டு, பணிகளை முடுக்கி விட்டுள்ளது.
கிராமங்களைத் தோ்வு செய்யும் பணிகள் காரைக்காலில் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் பிரதமா் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
200 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகா்வோா்களின் வீடுகளில், அரசே நேரடியாக செலவு செய்து சூரிய ஒளி மின் தகடுகளைப் பொருத்தும். நுகா்வோரின் தேவைக்கு போக எஞ்சியிருக்கும் மின்சாரம் புதுச்சேரியின் பொது மின் தொகுப்பில் சோ்க்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.