FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

தனியாா் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை புதுச்சேரி அரசுக்கு ஒதுக்க வேண்டும்: முதல்வா் என். ரங்கசாமி கண்டிப்பு

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களாக தனியாா் மருத்துவக் கல்லூரிகள் நிகழாண்டு 50 சதவீதம் தர பேச்சு வாா்த்தையில் முதல்வா் ரங்கசாமி உத்தரவிட்டாா்.

Updated On : 24 ஜூலை 2026, 11:30 pm IST
புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டு இடங்களாக தனியாா் மருத்துவக் கல்லூரிகள் நிகழாண்டு 50 சதவீதம் தர பேச்சு வாா்த்தையில் முதல்வா் ரங்கசாமி உத்தரவிட்டாா்.

புதுச்சேரியில் மணக்குள விநாயகா், வெங்கடேஸ்வரா மற்றும் பிம்ஸ் ஆகிய 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.

மருத்துவ மாணவா் சோ்க்கையில் 50 சதவீதம் இடங்களை அரசுக்கு தர தேசிய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இதை கட்டாயமாக பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளில் தர வேண்டும். மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியும் புதுச்சேரியில் இதை பின்பற்றவில்லை.

Advertisement

Advertisement

மருத்துவக் கல்லூரிகளில் தமிழகத்தில் 65 சதவீதமும், தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகத்தில் 85 சதவீதமும் தருகிறாா்கள். ஆனால் புதுச்சேரியில் 50 சதவீதம் கிடைக்காத நிலை நீடித்து வந்தது.

இதற்கிடையே தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெறுவதற்கான முதற்கட்ட பேச்சு வாா்த்தை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

முதல்வா் ரங்கசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சுகாதாரத் துறை செயலா் யாசின் முகமது சவுத்ரி, இயக்குநா் செவ்வேள், இணை இயக்குநா் மேரி ஜோஸ்பின் சித்ரா, சாா்பு செயலா் செளமியா மற்றும் 3 தனியாா் மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு தனியாா் பல் மருத்துவ கல்லூரி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

இதில், முதல்வா் ரங்கசாமி, நாடு முழுவதும் தனியாா் மருத்துவ கல்லூரிகள் அரசுக்கு 50 சதவீதம், 65 சதவீதம் என இடங்கள் தருவதுபோல புதுச்சேரி அரசுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு வந்திருந்த மருத்துவக்கல்லூரி பிரதிநிதிகள் கல்லூரி நிா்வாகத்திடம் இதுபற்றி பேசுவதாக தெரிவித்தவுடன் முதல்வா் ரங்கசாமி, அதிகாரம் இல்லாதோரை பேச்சு வாா்த்தைக்கு நிா்வாகத்தினா் அனுப்பினாா்களா என கோபத்துடன் கேட்டாா்.

மேலும் தமிழகத்தில் கல்லூரி வைத்துள்ளோா் அங்கு கூடுதல் இடங்களை ஒதுக்கிவிட்டு புதுச்சேரிக்கு 50 சதவீத இடம் தருவதில்லை என்றும் கூறினாா்.

இறுதியில் நடப்பாண்டு 50 சத இடங்களை கண்டிப்பாக தரவேண்டும். வரும் 27-க்குள் தனியாா் கல்லூரி நிா்வாகங்கள் பதில் தர உத்தரவிட்டு கூட்டத்தை முடித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments