சுதந்திர தின விடுப்பு வழங்காத 86 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவதில் விதிமுறைகளை
தேசிய விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று, விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்குவதில் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத 86 கடைகள் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது புதன்கிழமை தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்தது.
இதுகுறித்து விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் கோ.ராமு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேசிய விடுமுறை தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அவசர நிமித்தமாக வேலை செய்ய வேண்டியிருந்தால், அன்றைய தினத்தில் இரட்டிப்பு ஊதியம் அல்லது 3 நாள்களுக்குள், ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்குவதல் குறித்து அறிவித்து அதற்கான படிவம் 5 ஏ, வழங்கப்பட வேண்டும்.
இந்த விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுள்ளதா என்று விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் விழுப்புரம் தொழிலாளர் துணை ஆய்வாளர் ராமு, விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சார்லி, திண்டிவனம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ராமு, திருக்கோவிலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சிவக்குமார், கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆய்வாளர் உசேன் ஆகியோர் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
150 கடைகள், உணவு நிறுவனங்கள், போக்குவரத்து நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 86 கடைகளிலும், உணவு நிறுவன சட்டத்தின் கீழ் 26 நிறுவனங்களிலும், மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் 10 நிறுவனங்களிலும் விடுப்பு வழங்குவதில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது குற்ற ஈட்டு இணக்க கட்டண வசூல் அறிவிப்பு வழங்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.