FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அதிகரித்து வரும் ஒ மாசு: மனம், செவித்திறன் பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒலி மாசு அதிகரித்து வருகிறது. இதனால், மக்களின் மனம், செவித்திறன் பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

31 ஜனவரி 2024, 1:31 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஒலி மாசு அதிகரித்து வருகிறது. இதனால், மக்களின் மனம், செவித்திறன் பாதிக்கக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, ஒலி மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய தொழில்சாலைகள் இல்லாவிட்டாலும், சிறிய அளவிலான தொழிலகங்கள் உள்ளன. இவை நகரின் உள்ளேயே இயங்குவதால் ஒலி மாசு உண்டாகிறது.
 மேலும், சாலைகளை ஆக்கிரமிக்கும் வாகனங்களில் இருந்தும் ஒலி மாசு ஏற்படுகிறது. வாகனங்களின் இயக்கத்தால் வெளியேறும் இரைச்சல் ஒருபுறம் என்றால், வாகனங்களில் விதி மீறிப் பொருத்தப்பட்டுள்ள காற்று ஒலிப்பான்கள் எனப்படும் மீ-ஒலி (மிக அதிக ஒலி), ஒலிப்பான்களாலும் அதிகளவில் காற்று மாசு ஏற்படுகிறது. மேலும், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் வைத்து, ஒலிபரப்பு செய்து பெரும் இரைச்சலை ஏற்படுத்துகின்றனர்.
 இரைச்சல் மற்றும் மீ- ஒலியால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
 இதுபோன்ற இரைச்சலால் ஏற்படும் ஒலி மாசுவால் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
 இதுகுறித்து விழுப்புரம் அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் வேல்முருகன் கூறியதாவது:
 ஒலியானது காற்றில் அலைவடிவில் பரவக்கூடியது. கண்ணுக்கு புலப்படாது. நகரத்தில் பல வகைகளில் ஒலி மாசு உண்டாகிறது. மனிதனின் காதுகள் சாதாரணமாக 25 டெசிபல் வரையிலான ஒலியை உணரக் கூடியது.
 ஒலியானது கேட்க இனிமையாக இருந்தால், அது இசையாகக் கருதப்படும். அதே ஒலி கேட்க முடியாத அளவுக்கு அதிகமாகவோ, வரையறையில்லாத வகையிலோ இருந்தால் அது இரைச்சல் எனப்படும்.
 தற்போது, 25 டெசிபலுக்கும் அதிகமான ஒலி நகரங்களில் இருந்து வருகிறது. மனிதன் 40-60-80 டெசிபல் என்ற அளவிலான ஒலியைத் தொடர்ந்து கேட்கும்போதும், மிக அதிக ஒலியான 110 டெசிபல் அளவுடைய ஒலியை ஒரு முறை கேட்டாலும் கூட காதின் கேட்கும் திறன் பாதிக்கும்.
 பட்டாசு வெடிக்கும்போது, அதிலிருந்து எழும் சப்தம் செவித்திறனைப் பாதிக்கும். அதேபோன்று, ஒலிபெருக்கிகளில், அதிக ஒலியை வைத்து ஒலிபரப்புவதும், வாகனங்களில் பயன்படுத்தப்படும் காற்று ஒலிப்பான்களும் காதுகளைப் பாதிப்படையச் செய்யும். வெடி விபத்து போன்ற அதிக ஒலியானது உடனே காதுகளை பாதிப்படையச் செய்யும்.
 இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணித்து பயணிப்பது, காதுகளுக்கு அதிக ஒலி வருவதைத் தடுக்க உதவும். மற்றவர்களும் காதுகளுக்கு அதிக ஒலி வருவதைத் தடுக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தலாம் என்றார்.
 விழுப்புரம் அரசு மருத்துவமனை மன நல மருத்துவர் மணிகண்டன் கூறியதாவது:
 ஒலி மாசுவான இரைச்சலை தொடர்ந்து கேட்கும்போது, காதுகளைப் பாதிப்பது மட்டுமல்லாமல், மனதையும் பாதிக்கும். தொடர்ந்து இரைச்சலைக் கேட்கும்போது மன ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.தூக்கமின்மை பிரச்னை உண்டாகும். ஆகவே, மனதை எப்போதும் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். இரைச்சலைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
 ஒலி மாசுவைக் கட்டுப்படுத்தவும், இரைச்சலைத் தடுக்கவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேலும், வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களைப் பயன்படுத்தாமல் இருக்க காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments